பதிவு அலுவலகங்களில் பத்திரங்களை 10 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது.. தமிழக அரசு புது உத்தரவு
சென்னை: பதிவு செய்வதற்காக வரும் பத்திரங்களில் திருப்பி தராமல் நிலுவை வைத்த பத்திரங்களில், உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி பதிவு செய்ய நிராகரித்த பத்திரங்கள் குறித்து சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும்படி மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை, அலுவலகங்கள், மருத்துவமனைகள், கடைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டால் அதற்கான பத்திரங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும். இதற்காக சொத்தின் மொத்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பதிவு கட்டணமாக பெறப்படுகிறது.

அது போன்ற அரசு கட்டணத்தை செலுத்தி, முறையான ஆவணங்களுடனும், டோக்கன் பெற்றும் பத்திரப் பதிவு செய்ய தாக்கல் செய்தாலும் சார் பதிவாளர்கள் அதை பதிவு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் இடைத்தரகர்கள் மூலம் வரும் பத்திரங்களையே சார் பதிவாளர்கள் எந்த கேள்வியும் கேட்காமல் பதிவு செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பத்திரப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைகிறது. அரசுக்கான வருமானமும் குறைகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. பொதுவாக பதிவு முடித்துவிட்டால் அந்த பத்திரங்களை சார் பதிவாளர்கள் உடனுக்குடன் திருப்பித் தர வேண்டும். ஆனால் இவர்கள் 10 நாட்களானாலும் அந்த பத்திரங்களை திருப்பி தருவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதே வேளையில் பதிவுக்கு தகுதியான பத்திரங்களாக இருந்தாலும் ஏதேனும் உப்பு சப்பு இல்லாத காரணங்களை கூறி அவற்றை திருப்பி அனுப்புவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் மொத்தம் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களை எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து நிர்வாக மாவட்ட பதிவாளரும் தணிக்கை மாவட்ட பதிவாளரும் திடீர் ஆய்வுகளை நடத்த வேண்டும்.
அந்த ஆய்வில் திருப்பித் தரப்படாத பத்திரங்கள் இருப்பினும் அதை திருப்பிக் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். சொத்தையான காரணங்களை கூறி திருப்பி அனுப்பப்பட்ட பத்திரங்கள் குறித்தும் ஆராய வேண்டும். இது குறித்த விவரங்களை வாரந்தோறும் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.
உப்புச் சப்பில்லாத காரணங்களை சொல்லி பத்திரங்களை திருப்பி அனுப்பிய சார் பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான உத்தரவுகள் பதிவாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போல் சொத்தை காரணங்களை கூறினால் அதுகுறித்த புகார்களையும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினால், அந்த இடத்திற்கு திடீர் ஆய்வுக்கு வந்து உண்மைத்தன்மை கண்டுபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications