"உத்தமர்" ஸ்டாலின்.. கோட்டையே நடுங்கிடுச்சே, டான்ஸ் ஆட டைம் இருக்கா.. நறுக்குன்னு கேட்ட பாஜக சரஸ்வதி
ஸ்டாலினை விமர்சித்து காரசார பேட்டி தந்துள்ளார் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி
சென்னை: ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உதவி செய்பவராக, உத்தமராக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஊட்டிக்கு சென்று நடனமாட மட்டும் நேரமிருக்கிறதா? என்று பாஜகவின் எம்எல்ஏ சரஸ்வதி கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் சி.கே. சரஸ்வதி.. இவர்தான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதுமே, தொகுதியில் ஒருவித பரபரப்பு தொற்றி கொண்டது.
காரணம், இவரை எதிர்த்துதான், திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்டிருந்தார். ஆனால், சரஸ்வதி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலேயே மக்களை கவர்ந்துவிட்டார்..
ஆபரேஷன்
முழங்கால் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, இலவசமாக அந்த சிகிச்சையை வழங்குவதாக அப்போதே ஒவ்வொரு பிரச்சாரங்களிலும் மக்களை சந்தித்து உறுதி தந்திருந்தார்.. அதேபோல, எங்கு சென்றாலும் பாஜகவின் பிரச்சாரங்களை செய்யும்போதே, ஒரு டாக்டராக, மாஸ்க் பற்றின அவசியத்தையும், ஆரோக்கியம் குறித்த விஷயங்களையும் தொகுதி மக்களிடம் தெரிவித்து கொண்டிருந்தார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன்
இறுதியில் சரஸ்வதி வெற்றி பெற்றுவிட்டார்..சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.. ஒருவேளை சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றிருந்தால், இவரை சபாநாயகராக நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாராம்.. அப்படி மட்டும் நடந்திருந்தால், தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையையும் சுப்புலட்சுமி பெற்றிருப்பார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
மொடக்குறிச்சி
தற்போது தொகுதியில் கலக்கி கொண்டிருக்கிறார் பாஜகவின் சரஸ்வதி.. ஈரோட்டை அடுத்துள்ள பச்சபாளியில் அமைந்துள்ள, மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்தில் கலந்துகொண்ட மொடக்குறிச்சி பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:
பெட்ரோல் டீசல்
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.. இருந்தாலும் கூட, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசானது, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 8 ரூபாயும், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாயும் குறைத்து மக்கள் பெரிதும் மகிழ்வுறும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது மக்களிடம் எப்படியேனும் வாக்குகளை பெற வேண்டும் என்கிற நோக்கில் பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்து, பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது..
72 மணி நேரம்
ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இதுவரை பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி விலை குறைப்பை அறிவிக்கவில்லை.. இன்னும் 72 மணி நேரத்திற்குள் திமுக தலைமையிலான தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ5 என்றும் டீசல் விலையை ரூ 4 ஆகவும் குறைத்து சமையல் எரிவாயு விலையை ரூ 100 எனவும் குறைக்க வேண்டும், இல்லை என்றால் ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் கோட்டையை முற்றுகையிட்டு பாரதீய ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளதை. கண்டு தமிழக அரசு அதிர்ச்சி அடைந்து விட்டது..
உத்தமர் ஸ்டாலின்
ஆனால் தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உதவி செய்பவராக உத்தமராக வேஷமிட்டு திரியும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஊட்டிக்குச் சென்று நடனமாட நேரமிருக்கிறதா?... பாரத பிரதமரின் அக்கறையில் 5% கூட தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் தமிழக முதல்வரை, பாஜகவானது, மக்களின் துணையோடு எச்சரிக்கிறது. தமிழக நிதியமைச்சரின் புள்ளிவிவரங்கள் எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தெரியாது.. வாக்கு வங்கியை தேடி பொய்களை கொட்டித்தீர்த்த தமிழக முதல்வருக்கு மதிப்பு கூட்டு வரி எனப்படும் விலை மதிப்பை ரத்து செய்திட ஏன் தயக்கம்?