திருவள்ளூரில் சோகம்.. அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!
சென்னை: திருவள்ளூர் அருகே கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியின் நடைமேடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிக்கொண்ட மாணவர் மோகித் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி அருகே உள்ள கொண்டாபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. தற்போது அரையாண்டு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனால் மாணவ மாணவிகள் தேர்வுக்காக படித்து வருகிறார்கள்.

சுவர் இடிந்து விழுந்தது
காலை மதியம் என இரு வேளைகளில் தேர்வு நடந்து வருகிறது. இதன்படி 7 ஆம் வகுப்பு மாணவன் மோகித் என்பவர் இன்று மதியம் தேர்வு எழுத தயாராக இருந்துள்ளார். இதற்காகம் மதிய உணவு நேரத்தில் பள்ளியின் வளாகத்தில் உள்ள கைப்பிடி சுவர் அருகே அமர்ந்து மோகித் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவன் மோகித் இடிபாடுகளுக்குள் சிக்கினார். உடனே இதுபற்றி அறிந்ததும் ஓடி வந்த ஆசிரியர்கள் மாணவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.
கதறி அழுத பெற்றோர்
ஆனால் மாணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர் உயிரிழந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மகன் உயிரிழந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மாணவர் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பெற்றோர், உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அரசு பள்ளியில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் முறையான ஆய்வு மேற்கொண்டு இருந்தால் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்காது என்று கூறி கதறி அழுதனர். சமூக ஆர்வலர்களும் பள்ளியில் முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இடிந்து விழும் நிலையில் உள்ள சுவர்கள், கட்டிடங்கள், கழிவறைகளை புதுப்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications