"மத்ததை நான் பார்த்துக்கறேன்".. அமைச்சர்களிடம் எடப்பாடியார் சொன்ன "அந்த' வார்த்தை.. சபாஷ் முதல்வர்!
விவசாய கடன் தள்ளுபடியால் பூரித்து போயுள்ளார் முதல்வர்
சென்னை: செம குஷியில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. அதனால்தான் இப்படி ஒரு வார்த்தையை பூரிப்புடன் சொல்லி இருக்கிறார்..!
நேற்று தமிழகத்துக்கு மிக முக்கியமான நாள்.. ஒரே நாளில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு மாஸ் காட்டினார் எடிப்பாடியார்.
நேற்றைய தினம், அரசு ஊழியர்களுக்கான வயது வரம்பு 60 ஆக உயர்த்தி அறிவிப்பு வரும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது.. அதனால், அதுபோன்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்வீட் ஷாக் தந்து அசத்திவிட்டார் முதல்வர்.
வாழ்வாதாரம்
தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் 2016ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்திருந்த நிலையில் இன்றைய அறிவிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது.
அறிவிப்பு
முதல்வர் இப்படி அவையில் அறிவிப்பை சொன்னதுமே, அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கைகளை தட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.. அதேபோல, சட்டசபையில் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அமைச்சர்களும் நன்றிகளை தெரிவித்தனர்.
கால்கள்
இதில் எம்எல்ஏக்கள் ஒரு படிமேலே போய்விட்டார்கள்.. எல்லாரும் வரிசையாக நின்று கொண்டனர்.. பிறகு ஒவ்வொருவராக, முதல்வரின் இருக்கைக்கு சென்று நன்றிகளை சொல்லி கொண்டே இருந்தனர்.. பெண் எம்எல்ஏக்கள் உட்பட பலரும், முதல்வரின் கால்களை தொட்டு வணங்கினர்... சட்டசபை கூட்டம் முடிந்ததுமே, அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் முதல்வரையும், துணை முதல்வரையும் சூழ்ந்து கொண்டு நன்றிகளை சொன்னார்கள்.
அறிவிப்பு
அப்போது முதல்வர் பூரிப்புடன் காணப்பட்டார்.. தமிழக மக்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட திருப்தி அவரிடம் தென்பட்டது.. அமைச்சர்களிடமும், எம்எல்ஏக்களிடம் உற்சாகமாக பேசிய முதல்வர், இந்த விவசாய பயிர் கடன் தள்ளுபடி விபரத்தை, போஸ்டர் அடித்து எல்லா பகுதிகளிலும் ஒட்டுங்கள்... அரசின் சாதனைகளை மக்களிடம் தெரியப்படுத்துங்கள்.. எல்லாரும் அவரவர் பகுதிகளில், தேர்தல் பணியை செய்யுங்கள்.. மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்" என்றாராம்.
மக்கள் திட்டம்
இது முதல்முறை இல்லை, இதுபோன்ற முதல்வர் பலமுறை செய்தியாளர்களிடமே சொல்லி இருக்கிறார்.. அரசின் திட்டங்களை நாங்கள் எவ்வளோ செய்கிறோம்.. மக்களுக்காக நாங்கள் பாடுபடுகிறோம்.. மக்களை மனசில் வைத்துதான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வருகிறோம்.. என்னை விளம்பரப்படுத்திக்க சொல்றாங்க.. நான் என்ன நடிகனா? நீங்க எல்லாரும்தான், உங்களை போன்ற ஊடகங்கள்தான் அரசின் நல திட்டங்களை கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பார்..
தேர்தல்
இப்போது அதுபோன்றவே ஒரு கோரிக்கையை தன்னுடைய அவை உறுப்பினர்களிடம் எடப்பாடியார் வைத்ததில் வியப்பேதும் இல்லை.. இந்த முறை சட்டசபை கூடியதில் இருந்தே எத்தனையோவித அறிவிப்புகளை முதல்வர் அறிவித்து வந்தாலும், நேற்றைய அறிவிப்பு தமிழகத்துக்கு ஒரு ஹேப்பி நியூஸ்தான்.. இந்த அறிவிப்பு தேர்தல் முடிவு வரை நின்று பேசும்..!