பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்காதது ஏன்-முதல்வர் கேள்வி
சென்னை: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்காதது ஏன் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவர் கூறுகையில் 64 வயது வரை கமல்ஹாசன் நடித்துவிட்டார். அதாவது 40 ஆண்டுகாலம் நடித்துவிட்டார். தற்போது மக்கள் அவருக்கு ஓய்வு கொடுக்க நினைக்கிறார்கள்.
ஆனால் கமலோ தற்போது அரசியல் நாடகம் நடத்துகிறார். விஸ்வரூபம் பிரச்சினைக்கு நாட்டை விட்டே போகிறேன் என்றார். இவர் மக்கள் பிரச்சினைக்கு என்ன தீர்வை கண்டுவிடுவார்.
டிடிவி தினகரன்
40 ஆண்டுகள் நடித்த கமலை மக்கள் ஏற்கவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் மட்டுமல்லாது 234 தொகுதிகளிலும் மக்கள் நலப் பணிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. துரோகம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். டிடிவி தினகரன்தான் உண்மையில் துரோகி.
[கல்வியும் இலவசமாக கொடுக்கிறோம்.. அதற்காக படிக்காமல் இருந்துவிட முடியுமா?- முதல்வர் எடப்பாடி கேள்வி ]
தெரியவில்லையா
திமுக தலைவர் ஸ்டாலின் பச்சோந்திபோல் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ஸ்டாலினுக்கு அது மதவாத கட்சியாக, தீண்டத்தகாத கட்சியாக தெரியவில்லையா?
மக்கள் நலன் இல்லை
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் திமுகவினர் ஏன் எதுவும் கேட்கவில்லை? பாலாறு பாலைவனம் ஆகி வருகின்றது. தடுப்பணைகளை இடித்து விட்டு தண்ணீரை கொடுங்கள் என ஏன் திமுகவினர் கேட்கவில்லை? அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவே நினைக்கிறார்கள்; மக்கள் நலனில் அக்கறை இல்லை.
தயாராகவே உள்ளது
வானிலை மையம் பலமுறை அறிவிப்பு கொடுத்தும் மழை வரவில்லை. இருந்தாலும் மழை வந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளுக்கு தமிழக அரசு தயாராகவே இருக்கின்றது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.