அம்மா.. இங்க வாங்க.. உங்களுக்கு என்ன வேணும்.. பாட்டியிடம் வாஞ்சை காட்டிய பழனிச்சாமி!
மூதாட்டிக்கு முதியோர் உதவிதொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார் முதலமைச்சர்
சென்னை: "அம்மா.. இங்கே வாங்க.. உங்களுக்கு என்ன வேணும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசியதுடன், உதவியும் செய்துள்ளது நெகிழ்ச்சியை தருவதாக மூதாட்டி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போன 6-ம் தேதி தென்காசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி ஏர்போர்ட்டில் இருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாளையங்கோட்டையில் பொதுமக்கள் திரண்டு வந்து முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தார்கள். அந்த வரவேற்பு நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் ஒரு பாட்டி சிக்கி கொண்டார். அவர் அந்த கூட்டத்திலும் தட்டு தடுமாறி முதல்வரை நோக்கி வர முயற்சி செய்தார்.
பாளையங்கோட்டை சிறுதுணைநயினார் தெருவை சேர்ந்தவராம் அந்த பாட்டி. பெயர் திருப்பதி.. கஷ்டப்பட்டு வருவதை பார்த்த முதல்வர், பாட்டியை வரவேற்பு மேடைக்கு அழைத்து வரச்சொன்னார். "உங்களுக்கு என்னம்மா வேண்டும்" என்று பரிவோடு கேட்டார். அதற்கு பாட்டி, வாழ்வாதாரத்துக்கு ஏதாவது உதவி வேணும் என்று சொல்லி, கூடவே ஒரு மனுவையும் தந்தார்.
இதனை வாங்கி கொண்ட எடப்பாடியார், "இன்னும் நாலு நாள் கழிச்சு இதே பகுதிக்கு வாங்கம்மா.. என் கையாலேயே உங்களுக்கு உதவி தொகை பெறுவதற்கான ஆணையை தருவேன்" என்று சொன்னார். அத்துடன் பாட்டிக்கு ஒரு சால்வையையும் அணிவித்து அனுப்பி வைத்தார்.
அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை முதலமைச்சர் அந்த மூதாட்டியிடம் வழங்கினார். கேட்ட நாலு நாளில் உதவி கிடைத்ததை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த பாட்டி, முதலமைச்சருக்கு மகிழ்ச்சி பொங்க நன்றியை தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications