“தம்பி உதயநிதி அழைக்கிறார்”.. திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! இளைஞரணி மாநாடுக்கு ரெடியா?
சென்னை: திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த நிலையில் டிசம்பர் 17 ஆம் தேதி அன்று இளைஞரணியின் 2 வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. ஒருநாள் மாநாடாக இது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திமுக இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் திமுக கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "தேர்தல் களத்திற்கான பயிற்சிக் களமாக அமைய இருக்கும் இளைஞரணியின் 2 வது மாநில மாநாட்டின் வெற்றி, அதனைப் பறைசாற்ற வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, புதிய ஆத்திசூடியை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அதில், கழகம் வில்லாம் நின் அணியே கணையாம் என்று எழுதியிருந்தார். களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் தம்பி உதயநிதி அழைக்கிறார்." என்று ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், "மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நான் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன். காலை 9 மணி அளவில் கட்சியின் இருவண்ணக் கொடியை மகளிரணிச் செயலாளர் கனிமொழி அவர்கள் ஏற்றி வைக்கிறார்கள். மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் மாநாட்டைத் திறந்து வைக்க உள்ளார்கள். முக்கியப் பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாலை 6 மணிக்கு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
இந்த இளைஞரணி மாநாடு திமுகவின் வரலாற்றில் மட்டுமின்றி தமிழ்நாடு வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முக்கியமான மாநாடாக அமையப் போகிறது. அடுத்து வர உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு சேலம் மாநாடு அடித்தளம் அமைக்கும் மாநாடாக அமையும். கிட்டத்தட்ட 5 லட்சம் திமுக தொண்டர்கள், இளைஞரணி நிர்வாகிகள் வர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து இருக்கிறோம். இது அவர்களுக்கு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டும் மாநாடாக அமையப் போகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications