எந்த வித பிரச்சனையும் இல்லை.. இருந்தாலும் சமாளிப்போம்! முதல்வர் ஸ்டாலின் உறுதி! முக்கிய வேண்டுகோள்!
சென்னை: பெஞ்சல் புயலால் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குமோ, அந்த இடத்திற்கு முன்கூட்டியே நாங்கள் அதற்குரிய நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற காரணத்தினால் இப்போது எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதுதான் செய்தி எனவும், அப்படி இருந்தாலும் அது சமாளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகவும். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடனும் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை கொண்டும் செல்லக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், பெஞ்சல் புயலால் எந்த வித பிரச்சனையும் இல்லை என்பதுதான் செய்தி எனவும், அப்படி இருந்தாலும் அது சமாளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கைப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அது உங்களுக்கு நன்றாக தெரியும். நேற்றிரவு கடுமையான மழை பெய்திருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று செய்தி வந்திருக்கிறது. இந்நிலையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர், காஞ்சிபுரம். திருவள்ளூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தொடர்புகொண்டு அங்கிருக்கக்கூடிய நிலவரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டோம்.
நிவாரணப் பணிகள் எந்தளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டோம். நிவாரண முகாம்கள் எல்லாம் ஆங்காங்கு அமைக்கப்பட்டு மக்களும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இரவு நிச்சயமாக கடுமையான மழை பெய்யும் என்கின்ற காரணத்தால், முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று நாங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறோம்.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய பொறுப்பு அமைச்சர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் அந்தப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தி.நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதாக குற்றச்சாட்டு வந்தது. தற்போது இல்லை. தற்போது
தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. ஒன்றும் பிரச்சனை இல்லை. மழை தொடரும்பட்சத்தில், தண்ணீர் தேங்குமோ, அந்த இடத்திற்கு முன்கூட்டியே நாங்கள் அதற்குரிய நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற காரணத்தினால் இப்போது எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதுதான் செய்தி. அப்படி இருந்தாலும் அது சமாளிக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications