திமுக - அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தப்பு.. எங்க பங்காளி தானே.. சட்டென சொன்ன ஆர்எஸ் பாரதி
சென்னை: திமுகவும் - அதிமுகவும் கூட்டணி அமைத்தால் அதில் என்ன பெரிய உலக மகா தவறு இருக்கிறது? என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். மேலும், அதிமுக ஒன்னும் தீண்டத்தகாத கட்சி கிடையாது எனவும், அதிமுக எங்கள் பங்காளி கட்சி தான் எனவும் ஆர் எஸ் பாரதி கூறினார்.
திமுகவும் - அதிமுகவும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அது சந்தர்ப்பவாதம்.. திமுகவோ அல்லது அதிமுகவோ அல்லாத மற்றொரு கட்சி ஆட்சி அமைப்பது, இந்த இரு கட்சிக்கும் விருப்பம் இல்லை என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறியது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஆர் எஸ் பாரதி கூறியதாவது:-

அதிமுக - திமுக கூட்டணி வைத்தால் என்ன தப்பு?
அதிமுகவோடு நாங்க ஒன்றும் கூட்டணி பேசவில்லை.. கூட்டணியும் வைக்கவில்லை.. ஆனால் இதையெல்லாம் அவர்கள் பேசுவது தவறு.. ஏற்கனவே அந்த கட்சியோடு பலமுறை கூட்டணி வைத்து, ராஜ்யசபா எம்பி பதவி வாங்கி எல்லாம் போயிருக்கிறார்கள்.. அதிமுக ஒன்னும் தீண்டத்தகாத கட்சி கிடையாது.. பாஜக கொள்கை ரீதியான எதிரி என சொல்கிறார்கள்.
அந்த மாதிரி கூட அதிமுகவை கடந்த காலத்தில் சிபிஐ சொல்லவில்லை. அவர்களோடு கூட்டணியும் வைத்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்து இருக்கிறார்கள்.. இப்போ தவெகவோடு கூட்டணிக்கு சென்றுவிட்டனர். இதற்கு இப்படி ஒரு காரணத்தை சொல்கின்றனர். ஆனால் அதிமுகவோடு கூட்டணியே வைக்காதது போல இவர்கள் பேசுவது தான் தற்போது வேடிக்கையாக இருக்கின்றது.
அதிமுக எங்களுக்கு பங்காளி கட்சி
ஒருவேளை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் அதில் என்ன பெரிய உலக மகா தவறு இருக்கிறது? சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் 1964-ஆம் ஆண்டு பிரிந்தன. ஆனால் இன்று இரு கட்சிகளும் பல விஷயங்களில் இணைந்து செயல்படுகின்றன. இதே மாதிரி தான், எங்களை விட்டு அவர்கள் (அதிமுக) பிரிந்து சென்று 54 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்காக நாங்கள் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்று கூறவில்லை. ஆனால் அப்படி அமைத்தாலும் அதில் தவறு எதுவும் இல்லை.
நானே பலமுறை கூறியிருக்கிறேன். அதிமுக என்பது எங்களுக்கு பங்காளி போன்ற கட்சி. எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் தானே அவர்கள். தற்போது நாங்கள் எந்த கூட்டணி குறித்தும் பேசவில்லை. அதே நேரத்தில், இரு கட்சியினரையும் ஒரே இடத்தில் அமர வைத்துள்ளனர். சட்டப்பேரவையிலும் ஒரே வரிசையில் தான் அமர்ந்து இருக்கிறோம். இதைப் பார்க்கும்போது, இரு கட்சிகளின் தொண்டர்களும் மனதளவில் ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டார்கள் போல தெரிகிறது. அந்த சூழலை உருவாக்கியதற்கு காரணம் இவங்க தான்.. என்று பதில் அளித்தார்.
ஐயுஎம்எல் விலகியதற்கு ஆர்எஸ் பாரதி பதில்
தொடந்து திமுக கூட்டணியில் இருந்து ஐயுஎம்எல் கட்சி விலகி தவெகவில் சேர்ந்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஆர் எஸ் பாரதி கூறியதாவது:-
நடந்து முடிந்த தேர்தல் யார் நண்பர்கள், யார் பகைவர் என்பதை அடையாளம் காட்டி இருக்கிறது. இது நல்ல பாடம். மிக விரைவாக மாற்றம் வரும். அப்போது நாங்கள் யார் என்பதை காட்டுவோம். இந்தத் தேர்தலே ஒரு வித்தியாசமான தேர்தல் தான். யாருமே விஜய் வருவார் என சொல்லவில்லை. எப்படியோ வந்துவிட்டார். இப்படி ஒரு அதிசயமானது நடந்துவிட்டது. அந்த அதிசயத்துக்குப் பலவீனமானவர்கள் பலியாகிவிட்டார்கள். உறுதியானவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்..
இது மாதிரி சந்தர்ப்பவாதம் செய்பவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவர். ஒரு கட்சி பெயரை சொல்லி, ஒரு கட்சியுனுடைய தொண்டனுடய உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, 10 நாட்களிலேயே மாறிப் போவது என்பது எவ்வளவு கேவலமான ஒன்று. மக்கள் இதனை அறிவார்கள். அதிமுகவில் இருந்து தங்கம் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்களே.. அதே போன்று நீங்களும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லத் தயாரா?














Click it and Unblock the Notifications