"நாங்க இருக்கோம்..” மருத்துவர் பாலாஜியிடம் தொலைபேசி வாயிலாக பேசி நம்பிக்கை அளித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்றிருந்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இரவு மீண்டும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர் பாலாஜியின் நலன் குறித்துக் கேட்டறிந்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த டாக்டர் பாலாஜி, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். அப்போது, மருத்துவர் பாலாஜியிடம் தொலைபேசி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். "உங்களுக்கு ஒண்ணும் ஆகாது, விரைவில் குணமாயிடுவீங்க.." என நம்பிக்கை அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்றப் பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கே நேரில் சென்றிருந்தார் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அங்கு சென்று உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனையில் என்ன நடந்தது என விளக்கம் கொடுத்தனர். அதன்பிறகு, படுகாயமடைந்த அந்த மருத்துவரை பார்வையிட்ட பிறகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை தீவீரமாக மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர் விரைவில் மீண்டு வருவதற்கான தீவிர சிகிச்சையை சக மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். கண்டிப்பாக மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications