மாணவர்களுக்கு கொரோனா பரவல்.. இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் நிறைய மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. எத்தனை பாதுகாப்பு நடைமுறைகள் எடுத்த போதிலும் இது போல் கொரோனா பரவியது ஏன் என்பது குறித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். பள்ளிகளில் ரேண்டம் முறையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவதில் சிலருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொற்று குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மகாராஷ்டிராவில் மூன்றாவது அலை குறித்த கேஸ்கள் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா பரவலை தடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மொத்தத்தில் இரண்டாவது அலையை போல் மூன்றாவது அலை வேகமாக பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications