Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்மிகை நகராக மாறிய ஆர்.கே.நகர் தொகுதி- ஜெயலலிதா செய்யாததைச் செய்து தந்த ஸ்டாலின்

ஆர்.கே.நகரை மின்மிகை நகரமா மாற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்யாததை முதல்வர் ஸ்டாலின் செய்துவிட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழல் குற்றச்சாட்டினால் சிறைக்குச்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்த தொகுதி ஆர்.கே.நகர். ஆகவே அந்தத் தொகுதி வி.ஐ.பி தொகுதி வளையத்திற்குள் வந்துவிடும் என்றும் காலங்காலமாக தாங்கள் சந்தித்து வந்த கஷ்டங்கள் பனியைப் போல் விலகி விடும் என்று அந்தத் தொகுதி மக்கள் நம்பிக்கையில் மிதந்தனர்.

ஆனால், 'சட்டசபைக்குள் சென்ற ஜெயலலிதா, அந்தத் தொகுதியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை' என்கிறார்கள் அப்பகுதி மக்கள். வந்தார், நின்றார், வென்றார் அவ்வளவுதான் எனப் பெருமூச்சு விடுகிறார் அப்பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வரும் பலராமன்.

 சொந்த தொகுதியைக் கண்டுகொள்ளாத ஜெயலலிதா:

சொந்த தொகுதியைக் கண்டுகொள்ளாத ஜெயலலிதா:

ஆனால் இந்தத் தொகுதி இப்போது புதிய பொலிவைப் பெற்றுள்ளது என்பது உண்மை. கடந்த 15 ஆண்டுகளாக மின்வெட்டு பிரச்சினையால் தத்தளித்துவந்த இந்தப் பகுதி மக்கள் இப்போது உண்மையான விடியலைப் பார்த்திருக்கிறார்கள். மின்வெட்டே இல்லாத பகுதியாகவும், மின்மிகை தொகுதியாகவும் ஆர்.கே.நகரை மாற்றிக் காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கொடுங்கையூர், பழைய வண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை எனப் பல பகுதிகளை உள்ளடக்கியதுதான் ஆர்.கே.நகர். அதாவது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி.

இந்தத் தொகுதியின் தனிப்பெரும் அடையாளமே தமிழ்நாட்டின் மிகப் பெரிய மீன்பிடி துறைமுகமான காசிமேடுதான். இப்பகுதியில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. வியாபாரங்கள், கடைகள் மட்டுமே நிரம்பிய பகுதியான ஆர்.கே.நகர் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத நகரம்.

மிகவும் பழமையான பகுதி என்பதால் இன்றைக்கு உள்ளதைப் போல விசாலமான சாலைகள் இங்கே இல்லை. மிகவும் குறுகலான, சந்தடி பகுதியாகவே காட்சி தருகிறது. இந்தக் குறுகிய சாலைகளில் உள்ள மின் பகிர்மான பெட்டிகள் எல்லாம் மிகவும் பழையவை. மேலும் தரையைத் தட்டும் அளவுக்குக் கீழேதான் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இப்பெட்டிகள், காலப்போக்கில் சாலைகள் உயர உயரக் கீழே புதையும் அளவுக்குச் சென்றுவிட்டன. எனவே மழைக்காலங்களில் அதிகம் மின்வெட்டு வாடிக்கையான கதையாகவே இருந்துவந்தது.

 ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் வந்த மாற்றங்கள்:

ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் வந்த மாற்றங்கள்:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரே இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் கூட பெயரளவில் மட்டுமே இந்தத் தொகுதி விஐபி தொகுதியாக இருந்ததே ஒழிய, பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் நடந்துவிடவில்லை. வடசென்னை பகுதி என்பதால் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்னும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டன.
மக்களின் அந்தப் பழைய நம்பிக்கையை உடைத்தெறிந்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி. இந்தப் புதிய ஆட்சி காட்சியை மட்டும் மாற்றவில்லை; ஒட்டுமொத்த ஊர் மக்களின் பேச்சையே மாற்றி இருக்கிறது என்பதே உண்மை.

ஆர்.கே.நகரில் திமுக வென்ற பிறகு இப்பகுதி மீது தனிக் கவனம் எடுத்து பல்வேறு மாற்றங்களை முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் செய்து வருகிறார் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர். மாண்டாஸ் புயல், பெருவெள்ளம் எனப் பல பாதிப்புகளுக்கு ஆளான இந்தக் கடற்கரையோர பகுதியான ஆர்.கே.நகர் தொகுதியை அவர் மீட்டுக் கொண்டுவந்துள்ளார்.

"வார்டு 47 மற்றும் 49 ஆகிய இரண்டு பகுதிகளிலும் சிறு, குறு தொழில்கள் நிறைந்த பகுதி. இந்தப் பகுதியிலுள்ள மின் தடையைக் குறைப்பதற்காக Ring main unit conversion செய்து வருகிறோம். புதியதாக ஆர்.எம்.யூ. கன்வர்சன் இதுவரை 12 மாற்றியுள்ளோம். முன்பு எல்லாம் கால்வாய் சாலை, பாரதி நகர்ப் பகுதிகளில் எல்லாம் மழைக்காலங்களில் அதிக வெள்ளம் புகுந்துவிடும். ஆகவே பாதுகாப்பு காரணம் கருதி மின் இணைப்பைத் துண்டித்து வைப்போம்.

ஆனால் இந்தப் புயல் மழையின் போது அப்பகுதியில் மின்வெட்டே வராமல் பார்த்துக் கொண்டோம். அதற்குக் காரணம் மின் இணைப்பு பெட்டிகள் எல்லாம் தரையோடு தரையாகப் புதைந்து போய் இருந்தன. அனைத்தையும் இப்போது 5 அடிக்கு மேல் உயரமாக மாற்றி அமைத்துவிட்டோம்.

மழைக்காலங்களில் கொடுங்கையூர், எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதிகளில் உள்ள கால்வாய் திறந்துவிடப்பட்டுவிடும். அதனால் கட்டுக்கடங்காத மழைவெள்ளம் புகுந்துவிடும். அது ஒரு தலையாய பிரச்சினையாக இருந்துவந்தது. அந்தப் பகுதிகளிலிருந்த மின் பெட்டிகள் அனைத்தையும் கிட்டத்தட்ட 3 அடிகளுக்கு மேலே உயர்த்தி கட்டிவிட்டோம்.

 வெள்ளத்திலும் மின்வெட்டு இல்லாத ஆர்.கே.நகர்:

வெள்ளத்திலும் மின்வெட்டு இல்லாத ஆர்.கே.நகர்:

எவ்வளவு வெள்ளம் வந்தாலும் மின் பெட்டிக்கு எவ்வித பாதிப்பும் வராது. ஆகவே தைரியமாக மின்சாரம் வழங்கப்பட்டது. அதற்குக் காரணம் இந்தத் துரிதமான நடவடிக்கைதான்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் புதியதாக ஒரு இடத்தை ஆய்வு செய்து தந்துள்ளார். அதில் புதியதாக ஒரு துணை மின்நிலையம் நிறுவ உள்ளோம். இப்போது உள்ள கொருக்குப்பேட்டை மின் அலுவலகத்தையும் அந்தப் புதிய மின் நிலைய அலுவலகத்திற்கு மாற்றம் செய்ய உள்ளோம் ஆகவே இந்தப் பகுதிக்கு இனிவரும் காலங்களில் மின் பிரச்சனைகள் இருக்காது என்பது உறுதி" என்கிறார்.

நேதாஜி நகர் இரண்டாம் தெருவில் வசிக்கும் ஒரு தம்பதி, "முன்பு எல்லாம் லேசான மழை வந்தாலே மின்தடை வந்துவிடும். ஆனால் இந்த பில்லர்களை உயர்த்தி கட்டியதால், இந்தக் கனமழைக்குக்கூட மின் தடை வரவே இல்லை. அதேபோல் குறைந்த மின் அழுத்தப் பிரச்சினை என்பதே இல்லாத அளவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.
இத்தனை மாற்றமும் இந்த ஒன்றரை ஆண்டுக்கால திமுக ஆட்சியில்தான் நடந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வென்ற போதுகூட இந்த மாற்றங்களை அவர் செய்து கொடுக்கவே இல்லை" என்கின்றனர் இந்தத் தம்பதியர்.

"தண்டையார்பேட்டையைப் பொருத்தவரை, 38 வது வார்டு மற்றும் 40வது வார்டு இரண்டும் அதில் அடங்கும். இந்தப் பகுதியில் ஓவர் லோடு பிரச்சினை அதிகமாக இருந்துவந்தது. இந்தப் பகுதி குறுகலானது. ஆனால் மக்கள் தொகை அதிகம். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி.
ஆகவே மின் பற்றாக்குறையால் இந்தப் பகுதி திணறிக்கொண்டிருந்தது. 49 மின்மாற்றிகள் மூலம் 19 ஆயிரம் மின் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்தது. அதிகப்படியான இணைப்புகளால் அடிக்கடி டிரான்ஸ்ஃபார்மர் பழுது ஏற்பட்டுவிடும். அதனால் சரியான மின்சாரம் வழங்குவதில் சிக்கல் இருந்து வந்தது.

நாங்களே பல முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தோம். அரசுக்கும் உரியமுறையில் தகவல் அளித்திருந்தோம். ஆனால், இங்குள்ள பொதுமக்கள் 4.8.2021 அன்று அரசின் புகார் மையமான 'மின்னக'த்திற்கு தொலைப்பேசி செய்து புகார் அளித்துள்ளனர்.
அப்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்திலிருந்துள்ளார். அவரே அந்த அழைப்பை எடுத்துப் பேசி உள்ளார். புகாரை மக்கள் அளித்ததும் உடனடியாக அவரது கவனம் ஆர்.கே.நகர் பக்கம் திருப்பியது.

அடுத்த நாளே அமைச்சர் செந்தில் பாலாஜி, தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்திற்கு வந்துவிட்டார். எதனால் இப்பிரச்சினை வருகிறது என அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்தார். அப்போது அதிகாரிகள் ஓவர் லோடு பிரச்சினையை எடுத்துக் கூறினர். அமைச்சர் உடனடியாக புதிய டிரான்ஸ்ஃபார்மர்களை வாங்க உத்தரவு பிறப்பித்தார்.

 15 ஆண்டுகள் பழமையான மின் உபகரணங்கள்:

15 ஆண்டுகள் பழமையான மின் உபகரணங்கள்:

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 23 மின்மாற்றிகள் புதியதாக வாங்கப்பட்டன. வந்த வேகத்திலேயே அனைத்தும் மாற்றப்பட்டன. இப்போது இந்தப் பகுதியில் உயர் மின் அழுத்தப் பிரச்சினையே இல்லை. சீராகத் தங்குதடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் போர்க்கால நடவடிக்கைதான்" என்கிறார்.

கடந்த 15 வருடங்களாக இந்த பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மின் இணைப்பு பெட்டிகள் மாற்றப்படாமல் பழுதாகிக் கிடந்தன. மேலும் மழை வெள்ளத்தில் போது இந்தக் கால்வாய் வழியேதான் வெள்ளநீர் வெளியேற்றப்படும். அப்போது தரையைத் தட்டி நிற்கும் மின் பெட்டிகள் நீரில் மூழ்கிவிடும். ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை என மின்வெட்டு செய்துவிடுவார்கள். மூன்று நான்கு நாட்கள் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலைமையே நீடித்தது.

ஆனால் இப்போது திமுக ஆட்சியில் 45 பில்லர்கள் புதியதாக உயரப்படுத்தி நடப்பட்டுள்ளது. புதியதாக 15 பில்லர்கள் போடப்பட்டுள்ளன. இவை குறைந்தது 3 அடிக்கு மேல் உயர்த்தப்பட்டதால் இந்தக் கனமழைக்கு இப்பகுதியில் மின்வெட்டு என்பதே இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. சிவாஜி நகர், நேதாஜி நகர், பரமேசுவரி நகர்ப் பகுதி மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். முன்னதாக 49 மின்மாற்றிகள் இருந்தன. புதியதாக 23 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 11 மின்மாற்றிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதே பகுதியில் கடந்த 50 வருடங்களாக வாழ்ந்துவரும் ஒருவர் கூறுகையில், "கடந்தகால ஆட்சி வரை ஏதேனும் மின் பிரச்சினை வந்தால், வயரைக் கொண்டு வந்து ஜாய்ண்டுதான் போடுவார்கள். இப்படி அதிகப்படியான இணைப்புகளால் மின் அழுத்தம் குறைவு ஏற்பட்டுவந்தது. ஆனால் இப்போது முழுமையாக புதிய வயர்களை மாற்றிக் கொடுத்துள்ளார்கள். ஆகவே பழைய பிரச்சினைகள் இல்லாமல் நிலைமை மாறியுள்ளது.

எங்கள் பகுதியில் 900 குடும்ப அட்டைத்தாரர்கள் இருக்கிறார்கள். அத்தனை குடும்பங்களும் இந்தப் புதிய ஆட்சியால் விடுதலை அடைந்திருக்கிறார்கள். அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி" என்கிறார்.

 25 ஆண்டுகள் கழித்து திமுக வசமான ஆர்.கே.நகர்

25 ஆண்டுகள் கழித்து திமுக வசமான ஆர்.கே.நகர்

"இங்கு ஒட்டுமொத்த மின் நுகர்வோர் 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேலாக இருக்கிறார்கள். ஆர்.கே. நகரில் மட்டும் 67 ஆயிரம் நுகர்வோர்கள் இருக்கிறார்கள். இது கடலோர பகுதி என்பதால் சின்னசின்ன வீடுகளாக இருக்கும். குறைந்த பகுதிக்குள் அதிகம் பேர் வசிக்கக்கூடியதாக அமைந்திருக்கும். ஆகவே மின் தேவை அதிகம். ஆர்.கே.நகருக்கு மட்டும் 4 துணை மின்நிலையங்கள் உள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் பேசுகையில், "சுமார் 25 ஆண்டுகள் கழித்து இந்த ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக வென்றுள்ளது. அதற்கு முழுமையான காரணம் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அதிமுகவின் கையிலிருந்த இந்தத் தொகுதியை, ஸ்டாலின்தான் திரும்ப திமுகவுக்கு மீட்டுக் கொடுத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக மின்துறை சார்ந்த எந்தவித பணிகளும் என் தொகுதியில் மேற்கொள்ளப்படவே இல்லை. அந்தப் பிரச்சினை பொதுமக்களால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அடுத்த 20 மணிநேரத்தில் அவர் அனைத்து பிரச்சினைக்குத் தீர்வு கண்டு கொடுத்துள்ளார். முழுமையாக எங்கள் முதல்வர் ஸ்டாலின் சீர் செய்து கொடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் செய்து தந்த வசதிகள்:

முதல்வர் ஸ்டாலின் செய்து தந்த வசதிகள்:

எங்கள் தொகுதியிலிருந்து வந்த டிரான்ஸ்ஃபார்மர்கள் அனைத்தையும் ஆர்.எம்.யூ. ஆக மாற்றி இருக்கிறோம். இது எளிதான வேலை இல்லை. மின் துறை சார்ந்த உபகரணங்கள் அனைத்தையும் நவீனமாக மாற்றி இருக்கிறோம்.
அதனால் புயல் வந்த சுவடே தெரியாமல் மின்சார சார்ந்த தேவைகளைச் செய்து கொடுத்துள்ளோம். மூன்று துணைமின் நிலையங்கள் தேவை எனக் கோரிக்கை வைத்திருந்தேன். அதனை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+