பொங்கல் தொகுப்போடு ரூ.1000 சிறப்பு பரிசு... முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்
சென்னை: பொங்கல் தொகுப்போடு சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் போனசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 நியாய விலை குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
வருகிற திங்கட்கிழமை முதல் நியாய விலைக்கடைகளில், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்போடு ஆயிரம் ரூபாயை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை, வழங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.