சாதி, மதம் "நோ”! அப்பாவிகள் பாவம் - பதற்றம் வரும் முன்பே ஆக்சன்.. போலீசுக்கு முதலமைச்சர் ஆர்டர்
சென்னை: குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அதே நேரம் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது என்றும், சாதி, மத பாகுபாடு பார்க்கக்கூடாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காவல் பயிற்சி மையத்தில் உதவி காவல் ஆய்வாளர் பயிற்சியை நிறைவு செய்த 927 உதவி ஆய்வாளர்கள் முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நேற்று வரை நீங்கள் தனி மனிதர்கள். இன்று முதல் சட்டத்தின் காவலர்கள். நேற்று வரை நீங்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள். இன்று முதல் காவல்படையில் லட்சக்கணக்கான உறுப்பினர்களில் ஒருவர். பொறுப்புமிக்க மனிதர்களாகிய நீங்கள் மாறும் பெருமைமிகு நாள் இது.

மகிழ்ச்சி தெரிகிறது
காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளர்களாக அடியெடுத்து வைக்கும் 927 பயிற்சியாளர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 1 அன்று காணொலி மூலம் நான் பயிற்சியை தொடங்கி வைத்தேன். இப்போது நீங்கள் அந்த பயிற்சியை நிறைவு செய்து பணிக்குள் நுழைய இருக்கிறீர்கள். பயிற்சியை முடித்த கலைப்பைவிட பணியை தொடங்க இருக்கும் மகிழ்ச்சி உங்கள் முகங்களில் தெரிகிறது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவே முதல்முறை
முதல்முறையாக ஒரே நேரத்தில் 927 உதவி ஆய்வாளர்கள் பயிற்சியை முடித்துள்ளீர்கள். இதில் 632 பேர் தாலுக்கா அளவிலும் 264 பேர் ஆயுதப்படையிலும் 31 பேர் தமிழ்நாடு சிறப்பு காவல்பிரிவிலும் பயிற்சியை நிறைவு செய்துள்ளீர்கள். உங்களில் 336 பேர் காவல்துறை மற்றும் பிறத் துறையில் பல்வேறு நிலைகளில் ஏற்கனவே பணிபுரிந்தவர்களாக இருக்கிறீர்கள். 591 பேர் மட்டுமே புதிதாக பணியமைத்தப்படுகிறீர்கள்.

காவல்துறையில் சேர ஆர்வம்
இருதரப்பும் கலந்த இந்த அணியில் அனுபவம் வாய்ந்தவர்களும், புதிய ஆற்றல்மிக்கவர்களும் இடம்பெற்றுள்ளனர். பொறியியல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர்களும் அப்பணியை கைவிட்டு காவல்துறை பணியில் சேர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சேவை மணப்பான்மைக்கு நான் வணக்கம் தெரிவிக்கிறேன்.

கருணாநிதியின் நோக்கம்
260 பெண் ஆய்வாளர்கள் இப்பயிற்சியில் இடம்பெற்று உள்ளனர். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறி கொண்டவர்களாக பெண்ணினம் வாழ வேண்டும் என்று பாரதியார் சென்னதைபோல் தங்கள் பயிற்சியை பெண் ஆய்வாளர்கள் தங்கள் பயிற்சியை நிறைவு செய்துள்ளார்கள். இதன் மூலமாக புதிய பணித்தேர்வுகள் அனைத்திலும் பெண்களுக்காக 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற பெண்ணுரிமை காவலர் கருணாநிதியின் நோக்கம் நிறைவேறி இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

சிறப்பான பயிற்சி
கடுமையான பயிற்சியை முடித்து களப்பணியாற்ற செல்லும் பயிற்சி உதவி ஆய்வாளர்கள் அனைவரும் ஒளிமயமான ஏற்றம் காண எனது வாழ்த்தை தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த காவல் உயர் பயிற்சியகம் அமைய வேண்டும் என்ற எனது கனவு நனவாகி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அறிவு மற்றும் திறமையோடு நல்ல மனபல பயிற்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டன. உள்ளரங்கு மற்றும் திறந்தவெளி பயிற்சி அளிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

திறன் பயிற்சி
பயிற்சி, பாடத்திட்டங்களில் புதிய உத்திகள் ஏற்படுத்தப்பட்டன. பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் முதல் கணினிசார் குற்றங்கள் வரை பல்வேறு குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி உங்கள் ஒவ்வொரு நொடியையும் வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.

நல்லாட்சி
களப்பணி, ஆழ்ந்த தொழில்முறை தலைமைப்பன்பு, பகுத்தறிவு, புத்திக்கூர்மை, மென்கணினி திறன் ஆகியவற்றை பயிற்சியின் மூலம் தமிழ்நாடு காவல் பயிற்சியகம் வெற்றி பெற்றுள்ளது. நல்லாட்சியை அளவிட காவல்துறை செயல்பாடு முக்கியத்துவமாக இருக்கிறது. தனிநபர் உயிருக்கும் உரிமைக்கும் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு பராமரிப்பு, பொது அமைதியை பேணுதல் ஆகியவை மாநில வளர்ச்சிக்கு இன்றிமையாதது.

காவல்துறையின் கடமை
இதில் காவல்துறையின் பங்கு மிக மிக முக்கியமானது. சட்டம் ஒழுங்கை காப்பது உங்களின் முக்கிய கடமை. குற்றம் நடக்காமல் தடுப்பதும் உங்கள் கடமையாக இருக்க வேண்டும். எந்த குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரம் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது. எப்போது பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க உங்கள் பணியை பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதி, மத பேதம் கூடாது
சட்டம் மட்டுமே உங்களை வழிநடத்த வேண்டும். சாதி மதம் போன்ற பாகுபாடுகள் உங்கள் பணியில் குறுக்கிடக்கூடாது. ஏழை, பணக்காரர் என்ற பேதம் இருக்கக்கூடாது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பார்க்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர் குற்றம் செய்தவர் என்பதே உங்கள் அளவுகோளாக இருக்க வேண்டும். யாரையும் பக்க சார்புடன் அணுகி பிரச்சனையை பார்க்காதீர்கள்.
நலிந்த பின் தங்கிய ஏழை மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் நியாயமானதாக பாரபட்சமற்றதாக உறுதியானதாக, பன்புள்ளதாக இருக்க வேண்டும். சாதி, மத பதற்றங்கள் கொளுந்துவிட்டெரியும் முன்பாக அதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். " என்றார்.












Click it and Unblock the Notifications