பசுவுக்கு அகத்திக்கீரை.. மனைவியோடு பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின்! நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சென்னை: சென்னையில் சொந்த தொகுதியான கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சேர்ந்து இன்று பொங்கல் விழாவில் பல்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்ற இருவரும் பசுமாட்டுக்கு அகத்திகீரை வழங்கியதோடு, விழாவில் பங்கேற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக செல்பி எடுத்து கொண்டனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது ‛‛தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி சுழன்று கொண்டு இருந்தாலும் சொந்த தொகுதியாக இருக்கக்கூடிய கொளத்தூருக்கு வரும்போது அதிக மகிழ்ச்சி அடைகிறேன். முதல் அமைச்சர் என்ற முறையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு எனக்கு முக்கியம் தான்'' என்றார்.

முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடந்த பொங்கல் விழாவில் இன்று மாலை மனைவி துர்காவுடன் பங்கேற்றார். பசுமாட்டுக்கு இருவரும் அகத்திக்கீரை வழங்கினர். அதன்பிறகு இருவரும் பொங்கல் வைத்தனர்.
பொங்கல் விழாவுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு இருந்தவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டார். மேலும் முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா ஆகியோருடன் அங்கிருந்தவர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். அதன்பிறகு பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி சுழன்று கொண்டு இருந்தாலும் சொந்த தொகுதியாக இருக்கக்கூடிய கொளத்தூருக்கு வரும்போது அதிக மகிழ்ச்சி அடைகிறேன். முதல் அமைச்சர் என்ற முறையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு எனக்கு முக்கியம் தான். இதனை நான் மறந்துவிடமாட்டேன். அதற்காக தான் உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் எனும் திட்டத்தை அறிவித்தோம். இந்த திட்டத்தை 234 தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி அந்த தொகுதியில் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து தீர்வு காண வேண்டும் என முடிவு செய்தோம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்கள் பிரச்சனையை நேரடியாக கேட்டு மனுக்களை பெட்டியில் பெற்றோம். மனு அனுப்பியவர்களின் பெயர், முகவரியும் பெற்றோம். அந்த மனுக்கள் ஒட்டுமொத்தமாக பெட்டியில் அறிவாலயத்தில் சேர்த்து வைக்கப்பட்டு இருந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியை திறந்து 100 நாட்களுக்குள் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என கூறியதை செயல்படுத்தினோம். 100 நாட்களில் முடிந்தவரை மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். இதனை பெருமையாக கூறியுள்ளோம்.
கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டசபை உறுப்பினராக பல பணிகளை செய்தோம். ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து பல பணிகளை செய்துள்ளோம். இன்னும் பணிகளை செய்ய உள்ளோம். கொளத்தூர் தொகுதிக்கு வரும்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைவதாக கூறினேன். இதற்கு நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் காரணம்.

இங்கு 2 பெரிய திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி திறந்து வைத்துள்ளோம். 840 குடியிருப்புகள் ரூ.111.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அறநிலையத்துறையில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பிகாம், பிசிஏ, பிஎஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் உள்ளது. இதுபோல பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்'' என்றார்.












Click it and Unblock the Notifications