முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை- திராவிடர் இயக்க எழுத்தாளர்களுக்கு விருது- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முரசொலியின் ஆசிரியராக இருந்த மறைந்த முரசொலி செல்வத்தின் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்; அந்த அறக்கட்டளையின் சார்பாக திராவிடர் இயக்க எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மேடைகளில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், அதை ஏற்ற இறக்கத்தோடு எப்படி பேச வேண்டும் என தமக்கு பயிற்சி கொடுத்தவர் முரசொலி செல்வம் என முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.
முரசொலி நாளிதழ் நிர்வாக ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம், கடந்த 10-ந் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முரசொலி செல்வத்தின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏன், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறப்பதற்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் பேசினார். 'நான் சென்னை வருகிறேன்' என்றார். வந்தார். ஆனால் உடல் மட்டும்தான் வந்தது.
கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை அடுத்து, முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்கு பிறகு, என் மனம் உடைந்து சுக்குநூறாகிவிட்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறேன். காரணம், பள்ளிக்காலம் முதல், எனக்கு இயக்கப்பணிகளை கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம்.
மேடைகளில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், அதை ஏற்ற இறக்கத்தோடு எப்படி பேச வேண்டும் என எனக்கு பயிற்சி கொடுத்தவர் முரசொலி செல்வம். இவர் இன்று இல்லை என நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது.
முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். தி.மு.க முப்பெரும் விழாவின் போது முரசொலி செல்வம் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும்.
திராவிட இயக்க கருத்தியலை எல்லோருக்கும் ஆழமாக கொண்டு சேர்க்கும் வகையில் முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் 'திராவிட இதழியல் பயிற்சி அமைப்பு' ஒன்றை தொடங்க வேண்டும் என்ற திராவிடக் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களில் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்படும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications