"நாய்க்கடி நரகம்.." தமிழகத்தில் தீவிரமாகும் தெருநாய் தொல்லை - முதல்வரின் அவசர திட்டம்!
சென்னை: தெருநாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தெருநாய்க்கடி சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. தெருநாய்க்கடியால் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. அண்மையில் நாடாளுமன்றத்திலும் தெருநாய்க்கடி பிரச்சனை தொடர்பாக திமுக எம்.பி பிரகாஷ் பேசி இருந்தார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து தெருநாய்க்கடி பிரச்சனை தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.
தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர திமுக எம்.பி-க்களை வலியுறுத்தியுள்ளேன். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சிறுவர்கள் அச்சம் அடைகின்றனர்.
மேலும், தெரு நாய்க்கடி பிரச்சனைகளால் ரேபிஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதால் இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
தெருநாய்களை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, கண்காணிப்பு, காப்பகத்துக்கு நாய்களை மாற்றுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications