விஜய்யின் புது கட்சி.. பிரஸ் மீட்டில் வந்து விழுந்த கேள்வி.. ‘செம’ பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27ஆம் தேதி ஸ்பெயின் சென்ற நிலையில், 8 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஸ்பெயின் சுற்றுப்பய்ணத்தில் ரூ.3,400 கோடி அளவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்திற்கிடையே, நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றி கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள விஜய்யின் கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதும் இல்லை, எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என அறிவித்துவிட்டார் விஜய்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறியுள்ளனர். இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம், நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்" எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, விஜய்யின் அரசியல் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பை வரவேற்றிருந்தார். "புதிய கட்சி தொடங்கியதற்கு எனது பாராட்டு. இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமையுள்ளது. விஜய்யின் பணி சிறக்கட்டும்" என்று உதயநிதி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications