2015ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம்.. அன்றும் இன்றும் என்ன வித்தியாசம்? புட்டுப் புட்டு வைத்த ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் வெளுத்த கனமழை ஓய்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், நிவாரண முகாம்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாதிப்புகள் பற்றி விளக்கியுள்ளார். அப்போது, 2015ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம் என விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அதோடு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் 8 பேர் வரை இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட அசம்பாவிதஙளால் பலியாகி உள்ளனர்.

உடனடியாக களமிறங்கிய ஸ்டாலின்: மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை விட்டு விலகி ஆந்திரா நோக்கிச் சென்றுள்ளது. இதையடுத்து, மழை ஓய்ந்து, வெயில் அடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நகர் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் அதிரடி கள ஆய்வை இன்று காலையிலேயே தொடங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை சென்ட்ரல் கண்ணப்பர் திடல் நிவாரண முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் பெரியமேடு நிவாரண முகாம்களில் ஆய்வு செய்தார். அப்போது அவர் மக்களுக்கு உணவு பரிமாறினார். பின்ன, மழை வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.
2015ஐ விட மழை அதிகம்: முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "வரலாறு காணாத பெருமழை நேற்றைய தினம் கொட்டித் தீர்த்துள்ளது. மீனம்பாக்கம் 43 செ.மீ, பெருங்குடியில் 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பு ஏற்ற பிறகு நவம்பரில் பெரு மழை ஏற்பட்டது. அதனை மனதில் வைத்துதான் சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர்தேங்காமல் இருக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழு அளித்த ஆய்வின் அடிப்படையில் 4 ஆயிரம் கோடியில் வெள்ள நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம்.
அதனால்தான் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தத்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகம். 2015ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் நடந்த வெள்ளப்பெருக்கில், நுங்கம்பாக்கத்தில் 29.4 செமீ மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் 34.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதனை ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது பெய்துள்ள மழை மிக, மிக மழை பதிவாகி உள்ளது.
அது செயற்கை வெள்ளம்: 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கக் கூடாது. இதற்காக மிகவும் வருந்துகிறேன். 2005ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம், இது இயற்கை வெள்ளம். அன்றைக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென நீர் திறந்துவிடப்பட்டது அன்று வெள்ளம் ஏற்பட காரணம்.
அடையாற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திடீரென்று திறக்கப்பட்டது. வெள்ளம் ஏற்பட இது முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்த நீரை முன்கூட்டியே திறந்துவிட்டதால் இத்தகைய பெருமழையை ஓரளவு சமாளித்துள்ளோம்.
பாதிப்பை குறைத்துள்ளோம்: இத்தைய பெருமழையின்போதும் அதிகபட்சமாக 8 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீரை திறந்துவிட்டுள்ளோம். இப்போது செம்பரம்பாக்கத்தில் முன்கூட்டியே நீர் திறந்துவிடப்பட்டதால் பாதிப்பு குறைக்கப்பட்டது. சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
அடையாறு, கூவம் முகத்துவாரங்களில் அலைகளில் அளவு அதிகம் இருந்ததால் வெள்ளம் மெதுவாக வடிந்தது. 9 மாவட்டங்களில் 61,666 நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. காலை முதல் 1 லட்சம் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications