"கருணாநிதி கைது செய்யப்பட்டபோது துடித்துபோனவர்" வெங்கையா நாயுடுவை அழைத்தது பற்றி முதல்வர் விளக்கம்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார்.
சென்னை ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலையைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அதில் கலந்து கொண்டனர்.
கருணாநிதி கைதான போது! துடிதுடித்த வெங்கையா நாயுடு என்ன செய்தார் தெரியுமா? துரைமுருகன் ருசிகரத் தகவல்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைப் பாசத்திற்கு உரிய நண்பர் என்று அழைத்தார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டின் நிலையை உயர்த்த பாடுபட்டவர் என்பதால் தான். தமிழகம் முழுவதும் அவருக்குச் சிலைகள் எழுப்பப்பட்டு வருகிறது. இன்று எழுப்பப்பட்டுள்ள சிலையின் சிறப்பு என்னவென்றால், பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருணாநிதி சிலை அமைந்துள்ளது. இது மிகவும் பொருத்தமாக உள்ளது.
சிலை அமைந்துள்ள இடம்
பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியில் பயின்றவன், அண்ணாவின் காஞ்சி கல்லூரியில் பயின்றவன் என்று கருணாநிதியே தன்னை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்றார் போல இரு தலைவர்களுக்கும் இடையே கருணாநிதி சிலை அமைந்துள்ளது. கருணாநிதியால் இந்த ஓமந்தூரார் தோட்டத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த மாபெரும் கட்டிடம். இது சட்டசபையாகக் கட்டப்பட்ட கட்டிடம். இது இப்போது மருத்துவமனையாகச் செயல்பட்டு வந்தாலும் கூட, அது கம்பீரமான கருணாநிதியின் கனவு கோட்டையாகவே உள்ளது.
வெங்கையா நாயுடு
தமிழகத்தின் பெருமையை வானுயர உயர்த்தியவருக்கு நன்றியின் அடையாளமாகத்தான் சிலை எழுப்பப்பட்டுள்ளது. கருணாநிதி சிலையை யார் திறப்பது என்று யோசித்தபோது என் நெஞ்சில் தோன்றிய முகம் வெங்கையா நாயுடு. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இப்போது கருணாநிதி சிலையைத் திறந்து வைத்துள்ளார். துரைமுருகன் குறிப்பிட்டதைப் போல 2001இல் அன்றைய ஆட்சியாளர்களால் கருணாநிதி கொடூரமான கைது செய்யப்பட்டார்.
வெங்கையா நாயுடு
அப்போது அன்று குடியரசுத் தலைவராக இருந்த கேஆர் நாராயணனும் பிரதமர் வாஜ்பாயும் துடித்துத்துப் போனார்கள். அப்போது அன்றைய ஆட்சியாளர்கள் கடுமையாக விமர்சித்தவர் தான் வெங்கையா நாயுடு. அந்த நட்பு இன்றும் தொடர்கிறது. கருணாநிதி சிலையை யார் திறந்து வைக்கலாம் என்று சிந்தித்த போது, எங்களுக்குக் குடியரசு துணைத் தலைவர் பெயர் தான் முதலில் நெஞ்சில் தோன்றியது. இது குறித்து அவரை நேரில் சந்தித்துக் கேட்டபோது, அவர் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்..
நாடாளுமன்ற ஜனநாயகவாதி
வெங்கையா நாயுடு சிறந்த மிகச் சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதி என்று பெயரெடுத்தவர். மாநிலங்களுக்கு இடையே கொந்தளிப்பு ஏற்பட சமயத்திலும் சிறப்பாகக் கையாண்டவர். எனவே, கருணாநிதியின் சிலை வெங்கையா நாயுடு திறந்து வைத்துள்ளது மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும்.
அனைத்து துறைகளிலும்
நமது நாட்டில் குடியரசுத்தலைவர்கள் பலரை உருவாக்கியவர் கருணாநிதி. பன்முகத்திறமை கொண்டவர் கருணாநிதி. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அந்த துறையில் கோலோச்சியவர் கருணாநிதி. பராசக்தி, பூம்புகார் பட வசனங்கள் இன்றைக்கும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன, மாபெரும் அரசியல் கட்சியைத் தலைமையேற்று 50 ஆண்டுக்காலம் வழி நடத்திய ஒரே தலைவர் கருணாநிதி
தொலைநோக்கு பார்வை
நாம் காணும் நவீன தமிழ்நாட்டைத் தொலை நோக்குப் பார்வையோடு உருவாக்கிய தலைவர் கருணாநிதி. தமிழகத்தின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக விளங்கினார் கருணாநிதி. ஏழை அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக எழுதினார், பேசினார் கருணாநிதி. ஆட்சி அதிகாரம் கிடைத்த உடன் அவர்களுக்காகத் திட்டங்களைத் தீட்டினார் கருணாநிதி. அந்த திட்டங்களால் உருவானதுதான் இன்றைய தமிழ்நாடு" என்று தெரிவித்தார்.