இந்தி திணிப்புக்கு எதிராக எத்தனையோ தீரர்களை இழந்துவிட்டோம்.. இனியும் வேண்டாம்.. முதல்வர் வேதனை
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக ஏற்கெனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம், இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது என சேலம் தாழையூரை சேர்ந்த திமுக நிர்வாகி தங்கவேல் தற்கொலை செய்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி" இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.
இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த் தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்! இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது!
இந்தி திணிப்புக்கு எதிராக கொதித்தெழுந்த திமுக நிர்வாகி.. தீக்குளித்து தற்கொலை.. பதற்றம்!
போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம்.
'இந்தியைத் திணிக்காதே' எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை. தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது பேஸ்புக்கில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.