மனித-வனவிலங்கு மோதல்.. பாதிக்கப்படுவோருக்கான நிவாரண தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு - ஸ்டாலின்
சென்னை: மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மக்கள்தொகை, ஆக்கிரமிக்கப்படும் காடுகள், வனப்பகுதியில் கட்டப்படும் கட்டுமானங்கள், வனங்களை அழித்தல் உள்ளிட்டவற்றால் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி வருகின்றன. இதனால் மனிதர்கள்-வனவிலங்குகள் இடையே பெரிய பிரச்சனை உள்ளது.

சில நேரங்களில் மனிதர்களை வனவிலங்குகள் தாக்கி கொன்று விடுகின்றன. அதேவேளையில் சிலர் வனவிலங்கு தாக்குதலில் காயமடைந்து தப்பிக்கின்றனர். சிலர் வனவிலங்குகளின் கொடூர தாக்கத்தால் சில உறுப்புகளில் ஏற்பட்ட நிரந்தர பாதிப்புடன் வாழ்க்கையை வாழ்கின்றனர்.
இப்படி மனித-வனவிலங்குகள் மோதலில் பாதிக்கப்படுவோருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகை என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரண தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதே நேரத்தில் மனித -வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 3.11.2021 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன. முதல்வர் முக ஸ்டாலின் இந்த முறையீடுகளை மிகுந்த பரிவுடன் பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்கான இழப்பீட்டு தொகையை அதிகரித்துள்ளார்.
அதன்படி மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பதை ரூபாய் 10 லட்சமாக இரு மடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications