திமுக பொதுக் குழுவில் 2-ஆவது முறையாக திமுக தலைவரானார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக பொதுக் குழு கூட்டம் தொடங்கிய நிலையில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை உள்கட்சி தேர்தல் ஆணையரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.
திமுகவில்15ஆவது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி பேரூராட்சி, நகராட்சி பதவிகளுக்கான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் தேர்வு நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் இன்று நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.
புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக் குழு கூட்டம் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் லிங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதை உள்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அது போல் அவரை போல் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும் டி.ஆர்.பாலு பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த உயர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் செய்தார். முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் இரண்டாவது முறையாக திமுக தலைவரானார்.
திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலின், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். திமுக துணை பொதுச் செயலாளராக இ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ ராசா ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். தணிக்கை குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகியதால் அந்த பதவி காலியாக இருந்தது. மகளிர் பிரதிநிதித்துவ அடிப்படையிலான இந்த பதவிக்கு கனிமொழியை நியமித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது போல் திமுகவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications