அமைச்சர்கள் போட்டி போட்டு பணியாற்றுகிறார்கள்... 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: அமைச்சர்கள் போட்டி போட்டு பணியாற்றி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், முதலமைச்சர் என்பதை தாம் பதவியாக பார்க்கவில்லை என்றும் அதனை பொறுப்பாகவே பார்ப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள்.. யாருக்கு கிடைக்கும்?
மின் இணைப்பு
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதில் பேசிய அவர், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டமானது தலைமுறை தலைமுறையாய் பல தலைமுறைகளுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டம் எனத் தெரிவித்தார்.
ஸ்டாலின் சவால்
அதிமுக ஆட்சியின் போது 10 ஆண்டுகளையும் சேர்த்து 2 லட்சம் மின் இணைப்புகள் தான் மொத்தமாக கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் திமுக ஆட்சியில் நான்கே மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் கொடுப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியை விட மக்களுக்காக வேகமாக செயல்படும் ஆட்சி இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கிடையாது எனவும் அவர் கூறினார்.
முறைகேடுகள்
திமுக ஆட்சி உழவர்களின் ஆட்சி என்றும் தமிழக மின் வாரியத்தை அதிமுக அரசு சீரழித்து வைத்துவிட்டு சென்றுள்ளது எனவும் ஸ்டாலின் பேசினார். மேலும், மின் வாரியத்தில் எண்ணற்ற முறைகேடுகளை அதிமுக ஆட்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளதாகவும் பராமரிப்பு பணிகளே கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெறவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
போட்டி போட்டு
மேலும், தொடர்ந்து பேசிய அவர் இப்போது இருக்கும் திமுக அமைச்சர்கள் போட்டி போட்டு செயல்பட்டு வருவதாகவும், தன்னிடம் அனைத்து அமைச்சர்களும் தேதி கேட்பதால் யாருக்கு கொடுப்பது யாருக்கு விடுவது எனத் தெரியவில்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். இதனிடையே மாதம் 25,000 விவசாயிகளுக்கு என அடுத்த 4 மாதங்களுக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது.