தமிழகத்தில் முதல்முறையாக சொகுசு கப்பல் திட்டம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னையிலிருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருந்தார்.
ஜூன் மாதம் முதல் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பலில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் அமைக்கப்படும் என்றும் இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதற்காத தனியார் கப்பல் நிறுவனமான cordelia நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தை இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். இந்த கப்பலில் சென்னையிலிருந்து புதுவை, விசாகப்பட்டினத்திற்கு செல்லலாம்.

விருந்து
சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்ப ரூ 22,915 முதல் 2,37,000 வரை கட்டணங்கள் வசூலிக்கப்படும் என தெரிகிறது. உணவகங்கள், விளையாட்டு தளங்கள், கலைநிகழ்வுகளுக்கான அரங்கம் வசதிகளுடன் கப்பல் விருந்து, கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள் நடத்துவதற்கும் அலுவலக ஆலோசனை கூட்டத்திற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

எத்தனை நாட்கள்
இந்த கப்பலுக்கான கட்டணத்தை தனியார் நிறுவனமே நிர்ணயிக்கிறது. இந்த கப்பலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்படவேண்டும். 2 நாள், 3 நாள், 4 நாள், 5 நாட்கள் என பயண திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்புவுக்கும் திட்டம்
சென்னை துறைமுகத்திற்கு வருடத்தில் 4 முதல் 5 தடவை மட்டுமே சொகுசு கப்பல் வரும் என்ற நிலையில், சென்னை துறைமுகத்திலிருந்து 2.5 வருடத்திற்கு பிறகாக சொகுசு கப்பல் சேவை cordelia கப்பல் ஜூன் 2-ம் தேதி முதல் செப்டம்பர் 23-ம் தேதி வரை சுற்றுலா சேவை வழங்கும். இலங்கையில் பொருளாதார பிரச்சினை சீரானவுடன் இந்த சொகுசு கப்பல் கொழும்புவுக்கும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications