இளையராஜா வீட்டில் முதல்வர் ஸ்டாலின்! நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்து!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அங்கு அவருக்கு நினைவுப் பரிசையும் முதல்வர் வழங்கினார்.
இசைஞானி இளையராஜா மார்ச் 8ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றுகிறார். இந்த நிலையில் அவருக்கு வாழ்த்துகளை சொல்ல அவருடைய இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தார்.

அங்கு இளையராஜாவுக்கு வீணை புகைப்படம் இருந்த ஒரு நினைவுப்பரிசை ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
வீட்டிற்கு வந்த ஸ்டாலினை வரவேற்று இளையராஜா உள்ளே அழைத்துச் செல்கிறார். அப்போது ஸ்டாலின், தமிழக அரசு சார்பாகவும் திமுக சார்பாகவும் தலைவர் கலைஞர் சார்பாகவும் உங்களுக்கு வாழ்த்துகள் என கூறி பொன்னாடையை இளையராஜாவுக்கு போர்த்துகிறார்.
அது போல் பதிலுக்கு இளையராஜாவும் பொன்னாடையை போர்த்தி, "ஐயா (கலைஞர்) தான் முதன்முதலில் இசைஞானி என எனக்கு பட்டம் கொடுத்தார். அதன் பிறகு எத்தனை பட்டம் வந்தாலும் ஐயா வைத்தை மாற்றவே முடியவில்லை. அதுதான் நிலைத்திருக்கிறது" என பூரிப்புடன் கூறினார்.
இந்த பதிவில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 🎼🎼
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான #இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்! என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் இளையராஜா கோலோச்சி வருகிறார். 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியுள்ளார். தற்போது 35 நாட்களில் ஒரு முழு சிம்பொனியை உருவாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 8ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டன் நகரில் இளையராஜாவின் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
இசைஞானியின் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் பகலோ இரவோ கடந்ததில்லை என சொல்லலாம். இளையராஜா ஒரு நேர்காணலில் கூறும் போது, "நான் சிக்னலில் எனது காரை நிறுத்தியிருந்தேன். அப்போது அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர், "ஐயா உங்கள் பாடல்களால்தான் நான் இன்னமும் என் மனைவியை கொல்லாமல் இருக்கிறேன். இல்லையென்றால் அவளை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன்" என்றார் என நெகிழ்ச்சியுடன் ராஜா தெரிவித்திருந்தார்.
இளையராஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு அவரே வரிகளையும் கொடுத்துள்ளார். ஆன்மீகவாதியான அவர் அவ்வப்போது கோயில்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டுதான் இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் உயிரிழந்தார். இதனால் மிகவும் உடைந்து போன இளையராஜா அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். பவதாரணி நினைவு நாள் நிகழ்ச்சியில் "என் குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிட்டேனோ" என இளையராஜா உருக்கமாக பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications