தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்ததில், காங்கிரஸ் பெயரை குறிப்பிடாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர் தனது கடிதத்தில் "உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். களமிறங்கு! வெற்றியைக் கொண்டு வா" என்று கை சின்னத்தை மட்டுமே குறிப்பிட்டு உள்ளார். ஆனால் எங்குமே காங்கிரஸ் என்ற பெயரை கூட குறிப்பிடவில்லை. திமுகவுடன் நட்பாக இருக்கும் கூட்டணி கட்சிகளை தோழமை கட்சி என்று கூறி உள்ள முதல்வர் ஸ்டாலின் எங்குமே காங்கிரஸ் பற்றி பேசவே இல்லை.

காங்கிரஸ் - திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் கடுமையான மோதல் ஏற்பட்ட நிலையில்தான்.. முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் பெயரை தவிர்த்து இருக்கிறாரோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள மடலில்,
தோழமை தொடர்வோம்.. களத்தினில் வெல்வோம்
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடும், கழகத்தின் சார்பில் விருப்பமனு அளித்தவர்களுடனான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டு, அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
பத்தாண்டுகால படுமோசமான அ.தி.மு.க ஆட்சியினால் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட சீரழிவுகளைச் சரிசெய்து, கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய அளவில் உயர்த்திக் காட்டியிருக்கிறோம். இந்தப் பெரும் முயற்சிக்கும் சாதனைக்கும் துணை நின்ற கொள்கைவழித் தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அதனை மதித்து உணர்ந்தே இந்த முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்றன.
நமது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் தோழமைக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களிடமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களிடமும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களிடமும் மற்ற இயக்கத் தலைவர்களிடமும் தொகுதிப் பங்கீட்டு நிலவரங்களை உங்களில் ஒருவனான நான் நேரில் விளக்கினேன். அவர்கள் எதிர்பார்க்கின்ற எண்ணிக்கையில் உள்ள நியாயத்தை மதித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் அவர்களிடம் விளக்கமாகச் சொன்னேன்.
எப்போதும் என் மீது அன்பும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற உறுதியும் கொண்ட நமது தோழமை இயக்கத் தலைவர்களும், தங்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து, உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு, பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத்தான் பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறேன்.
தேர்தல் களத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குத் தேவைப்படும் தொகுதிகளை உரிமையுடன் கேட்பதும், அவற்றைப் பரிசீலித்து எந்தளவுக்கு வழங்க முடியுமோ அவற்றை வழங்குவதும் கூட்டணிக்கான நடைமுறையாகும். அதனை ஜனநாயகத்தன்மையுடன் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.
கழகக் கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நண்பர் கமல்ஹாசன் எம்.பி., அவர்கள் தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். அதுபோலவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் மனப்பூர்வமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்குச் சான்றாகும்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மதவாத அரசியலைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோளோடு தோள் நிற்பவை நம் தோழமை இயக்கங்கள். மதச்சார்பின்மை - மாநில உரிமை - சமூகநீதி - சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணிதான் நம்முடையது. அதில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கிறார்கள். திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழு நடத்தி வந்த நிலையில், தி.மு.க.வின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து, நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறேன். மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி, 23-ஆம் தேதி வரை, இடையில் ரமலான் திருநாள் விடுமுறை தவிர்த்து, 6 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெற்றுள்ளது.
கழகத்தின் நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. அதுவும் இந்த முறை 16 ஆயிரத்து 500 உடன்பிறப்புகள் கலந்துகொண்ட கொள்கை உறவுத் திருவிழா. மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணிநேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடைபெற்றது. விருப்பமனு அளித்த உடன்பிறப்புகளின் முகம் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்தினால் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்ற முடிந்தது.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களும் இனமானப் பேராசிரியர் அவர்களும் விருப்பமனு அளித்த ஒவ்வொரு உடன்பிறப்பையும் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்திய தேர்தல்கள் உண்டு. அதன்பிறகு, மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றாக அழைத்து, மொத்தமாக நேர்காணல் செய்ததும் உண்டு. இந்த முறை, ஒவ்வொரு தொகுதிவாரியாக விருப்பமனு அளித்தவர்களை அழைத்து நேர்காணல் நடைபெற்றது.
உடன்பிறப்புகள் தங்கள் வாழ்த்துகளை எனக்குத் தெரிவித்தனர். உடன்பிறப்புகளின் உழைப்பையும் அனுபவத்தையும் மதித்து உங்களில் ஒருவனான நான் நேர்காணல் நடத்தினேன். திராவிட மாடல் அரசின் சாதனைகள் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் நல்விளைவுகள், அதனால் பெருகியிருக்கும் பொதுமக்களின் ஆதரவு, தோழமைக் கட்சிகளின் பலம், கழக நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த பணி இவை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தேன்.
அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் கழகத் தலைமை நிர்வாகிகள் முன் தங்களுக்கான நேர்காணல் 'சீட்' ஒதுக்கப்பட்டிருந்ததில் விருப்பமனு செய்திருந்த ஒவ்வொரு தொகுதி உடன்பிறப்புகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம், "உங்கள் தொகுதியில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் களத்தில் பணியாற்ற வேண்டும்" என்று கழகத் தலைவர் என்ற முறையில் தெரிவித்தேன். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் தி.மு.க.வின் தொகுதிகள்தான் என்பதால், 234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, உடன்பிறப்புகள் அனைவரும், வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு என்ற உறுதியை அளித்தனர்.
உடன்பிறப்புகள் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடமும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகள் போக, தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.
உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். மதவாத அரசியலையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்!, என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications