விமர்சனங்களுக்காக இம்மியளவும் கவலைப்படுவதில்லை.. நல்லதை எடுத்துக் கொள்வேன்- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: விமர்சனத்தை பற்றி கவலைப்படவில்லை என முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான், இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும்.
விமர்சனங்களை பற்றி இம்மியளவும் கவலைப்படவில்லை. நல்லவைகளை எடுத்துக் கொள்வேன், கெட்டவைகளை புறம் தள்ளுவேன். இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என வருந்தும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன், இதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். 2 ஆண்டுகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தது போல் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நேற்று 2 ஆண்டுகள் சாதனை கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி என சாதனை மலரையும் வெளியிட்டார். திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications