சட்டப்பேரவையில் சிக்ஸர்... முதலிடத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..!
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிக அதிகமான வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர்களில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதற்காக இவரை நேரில் அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்!
தனது துறை ரீதியான தகவல்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு நாள்தோறும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து சிக்ஸர் விளாசியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
16-வது சட்டப்பேரவை
16-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 22 நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில் 54 துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை, நிதித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த கேள்விகள் அதிகம் முன் வைக்கப்பட்டன.
முதல்வர் அறிவுறுத்தல்
திமுக அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, அமைச்சர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த செயல்பாடுகளை முழுமையாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் முழு ஈடுபாட்டுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக அமைச்சர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பேரவையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முழு தகவல்களோடு பதிலளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
சட்டப்பேரவையில் சிக்ஸர்
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவையில் தனது துறை சார்ந்து எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் சலிப்பின்றி, சிறு தயக்கமின்றி பதிலளித்து சிக்ஸர்களாக விளாசி வந்தார். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகப் பைகளில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்களே இருக்கும் என அவர் அளித்த பதிலுரையை கேட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஆஃப் ஆனார்கள்.
பாராட்டு
இனி இவரிடம் வாதம் செய்வதற்கும், பேசுவதற்கும், கேட்பதற்கும் கேள்விகளே இல்லை என்ற நிலையை அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் உருவாக்கினார். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனே பேரவை நாகரீகம் குறித்து சிலாகித்து பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார். 22 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மிக அதிகமான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்களில் முதலிடத்தை பிடித்த இவருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
அடுத்தப்படி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அடுத்தபடியாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அதிக எண்ணிக்கையில் பதில் கொடுத்திருக்கிறார். அமைச்சரவையில் முதல்முறையாக இடம்பெற்றவர்கள் இது போன்று தங்கள் துறை ரீதியான செயல்பாடுகளை முழுமையாக அறிந்து வைத்திருப்பது முதலமைச்சர் ஸ்டாலினை மகிழ்ச்சிக் கொள்ளச் செய்துள்ளது.