‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி.. பூரித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான "நான் முதல்வன்" திட்டத்தில் பயிற்சி பெற்ற பிரசாந்த் என்பவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாடு அளவில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். இதனை பகிர்ந்து பெருமிதம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. 1016 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அகில இந்திய அளவில் மாணவர் ஆதித்யா ஸ்ரீ வத்சவா முதலிடத்தையும், அனிமேஷ் பிரதான் இரண்டாம் இடத்தையும், டோனுரு அனன்யா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 42 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்திய அளவில் 41-வது இடத்தில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ் ராம் பெற்றுள்ளார். இவர் தமிழக அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 78வது இடம் பிடித்துள்ள டாக்டர் எஸ். பிரசாந்த் தமிழ்நாட்டில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
பிரசாந்த், தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரான பிரசாந்த், 2022ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தார். அப்பா புற்று நோயால் இறந்துவிட, அம்மாவின் சம்பாத்தியத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார்.
பிரசாந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான "நான் முதல்வன்" திட்டத்தில் பயிற்சி பெற்றார். தன்னுடைய முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்ததாக பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக மாணவர்கள் 42 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "நான் முதல்வன் திட்டம் என் கனவு திட்டம் மட்டும் அல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் திட்டம். நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகளே அதற்கு சாட்சி" என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கல்லூரி மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில், தேர்ச்சியடைந்த 450 பேருக்கு, தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ரூ 25,000 வழங்கியது. இது மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு பயிற்சிக்கு ஊக்கத்தொகையாக ரூ 25,000 வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications