தரமான கல்வியில் தமிழகம் தற்போது நாட்டிலேயே 2வது இடம்! 1வது இடத்தை எட்டிப்பிடிப்போம்! ஸ்டாலின் உறுதி!
சென்னை: தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விரைவில் தரமான கல்வி வழங்கும் மாநிலமாக தமிழகம் நம்பர் 1 இடத்தை அடையும் என அவர் உறுதியளித்துள்ளார்.
நம்ம ஸ்கூல் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்து பேசியவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது;

பள்ளிக்காலம்
உங்களுக்கு நெருக்கமான நண்பர் யார் என்று கேட்டால், பெரும்பாலும் பள்ளிக்காலத் தோழர்களைத்தான் நாம் சொல்வதுண்டு. நேற்றுப் பார்த்தவரைக் கூட மறந்துவிடுவோம். ஆனால் நாம் குழந்தைகளாக இருந்தபோது, கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பெயரை நிச்சயமாக நாம் மறக்க மாட்டோம். அவர்கள் முகங்கள் நமக்கு அடிக்கடி வந்து நிழலாடும். அந்தளவுக்கு ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக் காலம்தான்.

நம்ம ஸ்கூல்
நாம் இந்தளவிற்கு உயர்வதற்கு, இந்த உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது அந்தப் பள்ளிக் கூடம் தான். அந்தப் பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா? என்ற உன்னதமான நோக்கத்தோடு "நம்ம ஸ்கூல் பவுண்டேசன்" நம்ம ஊர் பள்ளி என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையுமே அரசாங்கம் செய்து விட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும்; பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தைத் தெரிவிக்கலாம். அதற்கான வாசற்படிதான் இந்த நம்ம ஊர் பள்ளி திட்டம்!

நாட்டில் 2வது இடம்
இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறையின் பணி மிக முக்கியமானதாக இருக்கிறது. தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. முதலிடத்திற்கு முந்துவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டிருக்கிகிறது. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை இலக்கை மையமாகக் கொண்டு நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டம் முழு வெற்றியை நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அட்வான்ஸ் தொழில்நுட்பம்
செயலி மூலமாக பள்ளி செல்லாத பிள்ளைகளை பள்ளிக் கூடங்களுக்குள் மீண்டும் அழைத்துக் கொண்டு வரக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம். எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் படி பயிற்சி அளிக்க இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையும், தேவையான பொருள்களும் கல்வியோடு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications