கொள்ளையடிக்க போற மாதிரி 4 கார் மாறி போய் அமித் ஷாவை பார்க்கிறாரு எடப்பாடி.. ஸ்டாலின் அட்டாக்!
சென்னை: "இரவோடு இரவாக திட்டம் தீட்டி விடியற்காலையில் டெல்லி சென்று, 4 கார்கள் மாறி மாறி போய், வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் அமித்ஷாவை சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி" என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் நடைபெறும் ரம்ஜான் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அடையும் வளர்ச்சிக்கு அடித்தளமாக தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றம், கூட்டுக்குழுவில் திமுக சார்பில் குரல் எழுப்பி வருகிறோம். இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது பற்றி விமர்சித்துள்ளார். வக்பு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஸ்டாலின் பேசுகையில், "இஸ்லாமியர்களுக்கு எதிராக எது நடந்தாலும் முதல் எதிர்ப்பு குரல் கொடுப்பது திமுக தான். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக பாடுபட்டு வருகிறது. சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குவது திமுக.
எல்லாக் கட்சியினரும் இஃப்தார் நோன்பு விழா நடத்துவார்கள், ஆனால் இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை என்றால் வாயே திறக்கமாட்டார்கள். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து என சிறுபான்மையினருக்கு எதிராக என்ன நடந்தாலும் முதல் எதிர்ப்புக் குரல் எழுப்புவது திமுக தான்.
வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக திமுக சார்பில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் இந்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்து இருக்கிறோம்.
அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரவோடு இரவாக திட்டம் தீட்டி விடியற்காலையில் டெல்லி சென்று, விமான நிலையத்தில் இறங்கி 4 கார்கள் மாறி மாறி போய், ஏதோ கொள்ளையடிக்கப் போவது போல வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மத்திய உள்துறை அமித்ஷாவை சந்தித்துள்ளார். இதுதான் முக்கியம்.
மறுநாள் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறோம் எனத் தெரிந்தும் அவர் சட்டமன்றத்துக்கு வரவில்லை" என விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications