ரூ.1000 உரிமைத்தொகை தொடக்கவிழா எங்கே நடக்கும்? கசிந்த தகவல்! அதே நொடியில் வரப்போகும் ‘ஸ்வீட்’ மெசேஜ்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி, அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான தகுதி வாய்ந்தவர்களை அடையாளம் காண, தமிழ்நாடு அரசு சார்பில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன் பெற 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என்பது உள்ளிட்ட தகுதி வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
விண்ணப்ப பதிவு செம ஜோர்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இதுவரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 5 லட்சம் பேர் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். இரண்டாம் கட்டமாக விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கின. ஆகஸ்ட் 5 முதல் இரண்டாம் கட்ட விண்ணப்பதிவு நடைபெறவுள்ளது.
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15அம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனினும், இந்த திட்டத்தின் தொடக்க விழா எங்கு நடைபெறும் என்பது குறித்து இதுவரை அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அண்ணா பிறந்த ஊரில்: அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முதல்வர் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழா ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக நடத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில்: காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பிரமாண்ட தொடக்க விழாவில், அடையாளமாக சில பயனாளிகளுக்கு நேரடியாக உரிமைத்தொகை வழங்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அப்போதே தமிழ்நாடு முழுவதும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications