சென்னையின் முதல் 'U' வடிவ மேம்பாலம் ரெடி.. மாஸா இருக்கே! நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சென்னை ஓ.எம்.ஆர் இந்திரா நகர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள 'U' வடிவ மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை இந்திரா நகர் சந்திப்பு பகுதியில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே ரூ.108 கோடி மதிப்பில் 'U' வடிவ மேம்பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

40 அடி இடைவெளியில், 20 துாண்களுடன், 'யு' வடிவ மேம்பாலம் அமைந்துள்ளது. மொத்தம், 250 மீட்டர் நீளம், 25 அடி அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணிக்கு இடையூறாக நின்ற மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, அருகில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிந்து, சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது இந்த 'U' வடிவ மேம்பாலம். சென்னையின் முதல் U வடிவ மேம்பாலமான இதை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.
இந்திராநகர் சிக்னல் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 13,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்திரா நகர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.











Click it and Unblock the Notifications