பள்ளி மாணவர்களுடன் செல்ஃபி! சிறுவனுக்கு சாக்லேட்! குழந்தைகளை கண்டதும் குதூகலமான முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் குடியரசு தினவிழா ஊர்தியை பார்வையிட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் செல்ஃபி எடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
Recommended Video
மேலும், தன்னை சந்தித்த சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், குழந்தைகளுடன் குழந்தையாக சிறிது நேரம் தனது நேரத்தை செலவிட்டுவிட்டு புறப்பட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் பள்ளி மாணவர்களை கண்டதும் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வந்து சந்தித்தது அங்கிருந்த ஆசிரியர்களையும், பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

குடியரசுத் தின விழா
மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட குடியரசு தின ஊர்தி தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு சென்னை மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை ஏராளமான பொதுமக்கள் தினமும் ஆர்வமுடன் பார்த்துச்செல்லும் நிலையில், இன்று பள்ளி மாணவ, மாணவிகளும் குடியரசு தின ஊர்தியை பார்வையிட வந்தனர். அந்த நேரம் பார்த்து கோட்டையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் பள்ளி மாணவர்களை கண்டதும் தனது காரை நிறுத்தச்சொல்லி இறங்கி விறுவிறுவென மாணவர்கள் அருகில் சென்றார்.

வணக்கம் சார்
முதலமைச்சர் ஸ்டாலினை கண்டதும் மாணவர்கள் வணக்கம் சார் என்றும் குட்மார்னிங் சார் எனவும் கோரஸாக குரல் எழுப்பினர். இதையடுத்து இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊர்தி என்ன ஊர்தின்னு தெரியுமா என மாணவிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பிறகு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி இது என விளக்கம் அளித்த ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

சிறுவனுக்கு சாக்லேட்
அப்போது எண்ணூரை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் குடியரசுத் தின ஊர்தியை பார்வையிட வந்திருந்தான். அந்த சிறுவன் அருகில் சென்ற ஸ்டாலின் பெயர் என்ன என வினவியதோடு, சாக்லேட் ஒன்றையும் பரிசாக கொடுத்து வாழ்த்தினார். அதைப்பெற்று கொண்ட அந்தச் சிறுவன் முதல்வர் ஸ்டாலினுக்கு தைங்யூ என ஆங்கிலத்தில் நன்றி கூறினான். சுமார் 10 நிமிடம் வரை மாணவர்களுடன் தனது நேரத்தை செலவிட்டுவிட்டு முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார்.

எளிமையாக
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கக்கூடியவர். இருப்பினும் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் மிக எளிமையாக மக்களை சந்திக்கவும், மாணவர்களை சந்திக்கவும் சாலையில் திடீரென காரை நிறுத்திவிட்டு இறங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications