நீ தள்ளி நின்றால், நானும் தள்ளி நிற்பேன்.. ராகுலை எதிர்க்க முடிவெடுத்த ஸ்டாலின்.. போர் ஆமாம் போர்!
சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலினின் 73-வது பிறந்தநாள், ஒரு பக்கம் கேக் வெட்டி கொண்டாடிக்கொண்டிருந்த அதே நேரத்தில்... இன்னொரு பக்கம் கூட்டணி கோட்டையில் விரிசல் சத்தம் பலமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது.
வாழ்த்தில் விழுந்த ஓட்டை!
வழக்கமாக "மை டியர் பிரதர்" என்று உருகும் ராகுல் காந்தி, இந்த முறை ஏனோ மிகத் தாமதமாக, ஒரு 'ஃபார்மல்' வாழ்த்தோடு நிறுத்திக்கொண்டார். பிரதமரே அதிகாலையிலேயே வாழ்த்திவிட, ராகுலோ நேற்று மதியம் 2 மணிக்கு மேல்தான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "சகோதரர்" என்ற வார்த்தை இல்லை; வெறும் "தமிழக முதல்வர்" என்ற சம்பிரதாய வாழ்த்துதான் இருந்தது.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்தான் 'டாப் நாட்ச்'! பிற தலைவர்களுக்கு விரிவாகப் பதிலளித்த ஸ்டாலின், ராகுலுக்கு மட்டும் "நன்றி (Thank you for your warm wishes)" என்று மிகச் சுருக்கமாக, எந்த ஒரு கூடுதல் பாசமும் இன்றி முடித்துக்கொண்டார். "நீ தள்ளி நின்றால், நானும் தள்ளி நிற்பேன்" என ஸ்டாலின் காட்டிய இந்த 'சிம்பிள் டோன்' டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
யார் வந்தாலும்... வராவிட்டாலும்!
காங்கிரஸ் தரப்பு 40-க்கும் மேற்பட்ட இடங்களைக் கேட்டு அடம்பிடிக்க, "25-க்கு மேல் கிடையாது" என்பதில் அறிவாலயம் கறாராக இருக்கிறது. "ராகுல் பிடிவாதம் பிடித்தால், காங்கிரஸ் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கவும் நான் தயார்.. இது ஒன்றும் லோக்சபா தேர்தல் அல்ல.. சட்டசபை தேர்தல்.. திமுக ஆட்சி வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல்.. இங்கே ராகுலுக்கு வேலையே இல்லை" என்பதைத்தான் ஸ்டாலினின் அந்த ஒற்றைவரிப் பதில் உணர்த்துகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஓ.பி.எஸ் - பிரேமலதா: ஸ்டாலினின் 'புதிய' பலம்!
காங்கிரஸ் நழுவினால் என்ன? இதோ ஸ்டாலின் கையில் புதிய அஸ்திரங்கள்!
தேமுதிக என்ட்ரி: சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்திருப்பது பெரிய பிளஸ். பிரேமலதா விஜயகாந்த் திமுகவோடு கைகோர்த்திருப்பது, வட மாவட்டங்களில் ஒரு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. தேமுதிக ஒரு பலம் வாய்ந்த.. கட்டுப்பாடில்லாத குதிரை. அதை சரியாக பயன்படுத்தினால் நல்ல பலன் தரும்.
ஓ.பி.எஸ் வருகை: ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திமுக பக்கம் சாய்ந்திருப்பது, தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான வாக்குகளைத் திரட்ட ஸ்டாலினுக்குப் பேருதவியாக இருக்கும்.
விஜய் - சங்கீதா சர்ச்சை: 3-வது அணிக்கு ஆப்பு?
மறுபுறம், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK) மூன்றாவது அணியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கிளம்பியுள்ள விஜய் - சங்கீதா விவாகரத்து மற்றும் நடிகை தொடர்பான சர்ச்சை, விஜய்யின் அரசியல் பிம்பத்தைப் பலவீனப்படுத்தியுள்ளதாகப் பேச்சு நிலவுகிறது. இதனால் தார்மீக ரீதியான நெருக்கடிக்கு ஆளாகியுள்ள விஜய், தற்போது தேர்தல் வியூகங்களில் சற்றே பின்வாங்கியிருக்கிறார். இதுவும் திமுகவிற்குச் சாதகமாகவே முடிந்துள்ளது.
முடிவு: களத்தில் 'தனி ரூட்'!
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், ஸ்டாலின் மிகவும் தெளிவாக இருக்கிறார். ராகுல் காந்தியின் மேலாதிக்கத்தை ஏற்கத் தயாராக இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினாலும், ஓ.பி.எஸ் மற்றும் தேமுதிக போன்ற புதிய கூட்டாளிகளை வைத்துக்கொண்டு 200 இடங்களுக்கு மேல் தட்டித் தூக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் 'தளபதி'.












Click it and Unblock the Notifications