அம்பேத்கர் சிலைக்கு முதல்வர், விஜய் மரியாதை! ரூ.332.60 கோடிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார் ஸ்டாலின்
சென்னை: இன்று ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 48,436 பயனாளிகளுக்கு 104 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். அதேபோல, அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று ஏப்ரல் 14ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளாகும்.. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்டமேதை பிஆர் அம்பேத்கரின் 135வது பிறந்த தினத்தை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி நாடாளுமன்ற வளாக புல்வெளியில் அம்பேத்கருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். அதேபோல தமிழகத்திலும் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
அம்பேத்கரின் பிறந்தநாளான சமத்துவ நாளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் 10 தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
அண்ணல் அம்பேத்கர்
அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில், முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பிறகு அண்ணல் அம்பேத்கரின பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் தலைமையில் "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.
தொடர்ந்து, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், ரூ.227 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கான 18 விடுதிக் கட்டடங்கள், 46 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, 19 சமுதாய நலக்கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் 1000 பழங்குடியினர் குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 48,436 பயனாளிகளுக்கு 104 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.
சமத்துவ நாள் விழா
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில் மொத்தம் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 332 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்டடங்களை திறந்து வைத்தும், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பிக்க உள்ளார். சமத்துவ நாள் விழாவில், முதலமைச்சர் தமிழாக்கம் செய்யப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இரண்டு நூல்களையும், வன உரிமைச் சட்டத்திற்கான வரைபடத்தையும் வெளியிட உள்ளார்.
இந்த விழாவில், பிரகாஷ் அம்பேத்கர் சிறப்புரையாற்றவுள்ளார்கள். அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
தமிழக பாஜக
தமிழக பாஜகவிலும், இன்று அம்பேத்கர் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.. இதற்காக மாநில பொதுச்செயலாளர் பி.கார்த்தியாயினி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.. இதில், செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மகளிரணி பொதுச்செயலாளர் கே.நெல்லையம்மாள் உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இன்று 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை அம்பேத்கர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அண்ணாமலை ஏற்கனவே அறிக்கை மூலம் அறிவித்திருக்கிறார்.
தலைவர்கள் மரியாதை
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.. இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, சாமிநாதன், தி.மு.க. எம்.பி. ஆ. ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மரியாதை அண்ணலின் சிலைக்கு செலுத்தினார்கள்.
அதேபோல, விஜய்யும் அண்ணல் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.. முன்னதாக அம்பேத்கரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications