பாஜகவின் கொடுங்கோன்மை.. ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது! முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது தொடர்பாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். மாநில சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடிதம்: மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு எதிராகப் பொதுமக்கள் மாநிலங்கள் திரள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் சருக்க விவரம், "பெரியார் எனும் மாமனிதர் கொண்டிருந்த இலட்சிய வைராக்கியத்தின் தொடக்கம்தான் அவர் பங்கேற்ற வைக்கம் போராட்டம். அந்தப் போராட்டத்தில் கிடைத்த வெற்றி என்பது இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் இயக்கத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய உந்துசக்தி. அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பயணம்.
பெரியார் மண்: அந்தப் பயணம் அரசியல் களத்திலும் தொடர்ந்ததன் விளைவாகத்தான் இந்திய அளவிலான இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உள்ளிட்டவையாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவர் நெறிப்படி, அனைத்துச் சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வாழும் சமத்துவபுரங்களைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார் கருணாநிதி . அதற்குத் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் சூட்டினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு சமத்துவக் குடியிருப்பு அமைக்கப்பட்டதில்லை என்பதால்தான் நம் தமிழ்நாட்டைப் பெரியார் மண் என்று போற்றுகிறோம்.
மக்களைப் பிளவுடுபத்தி, மாநிலங்களைச்சிறுமைப்படுத்தி ஆளத் துடிப்பவர்களுக்குப் பெரியார் என்றாலும், சமத்துவம் என்றாலும், சமூகநீதி என்றாலும் இவையனைத்தையும் ஒன்றாக்கிய திராவிட மாடல் என்றாலும் எரிச்சல் ஏற்படுகிறது, வன்மம் வெளிப்படுகிறது.வைக்கத்தில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்ட அதே நாளில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் ஜனநாயக விரோதத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்துக் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்க நினைக்கிறது.
ஒன்று கூட வேண்டும்" நடைமுறைச் சாத்தியமில்லாத - மக்களாட்சி முறைக்கு விரோதமான - கூட்டாட்சித் தத்துவத்தைக் குற்றுயிராக்கும் ஒரே நாடு - ஒரே தேர்தல் முறைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14-2-2024 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைக்கம் விழாவில் பேசிய கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன், மாநிலங்களின் சுயமரியாதைக்காக நாம் எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் கண்டு அதன் வழியாகத் திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட தந்தை பெரியாரின் வழியில்,மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
நூறாண்டுகள் கடந்தாலும் நமக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கருணாநிதி வழியில் போராடுவோம்!அவர்களைப் போலவே வெற்றி காண்போம்!" என்று அதில் கூறப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications