தேதி குறிச்சாச்சு! அடுத்த விசிட் ரெடி.. கள ஆய்வில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின்.. எங்கே தெரியுமா?
சென்னை: வரும் ஜூலை 31ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்த்தின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தமிழ்நாட்டில் முதன் முறையாக வேலூரில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்ட ஆய்வு பணியை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கள ஆய்வுகள் நடைபெற்றன.

அந்த வரிசையில் வரும் ஜூலை 31ஆம் தேதி 4 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான அரசின் திட்டங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி, மருத்துவம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும், வடகிழக்கு பருவமழை வரும் செப்டம்பர் மாதம் தொடங்குவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்த உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்கின்றனர். முக்கிய துறைகளின் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். 4 மாவட்டங்களைச் சேர்ந்த சிறு குறு தொழில் முனைவோர், வியாபாரிகள் உள்ளிட்டோரும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை, குறைகளை தெரிவிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications