இது உதவித்தொகை அல்ல.. இந்த அன்பு உடன்பிறப்பின் உழைப்புத்தொகை.. ரூ 1000 பயனாளிகளுக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: கலைஞர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
மகளிர் உதவித் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் முதலே ரூ 1000 உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேர் உதவித்தொகைக்கு தகுதியானவர்கள்.

57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிராகரிக்கப்பட்டோர் மீண்டும் ரூ 1000 உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க உதவி மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கலைஞர் உதவித் தொகை திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பியுள்ள முதல்வரின் கடிதத்தில் கூறியிருப்பதாவது: "தங்களது அன்பு கட்டளையால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக தொண்டாற்றும் வாய்ப்பை பெற்ற உங்களின் அன்பு உடன்பிறப்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்கு எழுதும் கடிதம்.
பேருந்தில் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலக் கல்லூரிக்கு வரும் புதுமைப் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, நகைக்கடன் ரத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவது திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் அறிவீர்கள்.
மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத் திட்டங்கள் உருவாக்கி இந்த வரிசையில் மற்றுமொரு மாபெரும் திட்டம் தான் தேர்தலுக்கு முன்னதாக நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் மிகமிக முக்கியமான மகளிர் உரிமைத் திட்டம். இந்த திட்டத்தின் பயனாளியாகத் தகுதியின் அடிப்படையில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக்கணக்கில் தமிழ்நாடு அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும். பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் எனப் பெண்களின் பல மணிநேர உழைப்பு இருக்கிறது. இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளிலும் பணியிடங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கிய மகளிர் முன்னேற்ற மாண்பாளர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் இந்த திட்டம் தொடங்கப்படுவதால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை." இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications