சட்டசபை செயலர் சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த டபுள் கிஃப்ட்! இதுவரை யாருக்குமே கிடைச்சதில்ல
சென்னை: தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசனின் பதவி 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதன்மை செயலாளராக அவருக்கு அந்தஸ்து உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது, எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அனைத்தையும் சட்டசபை செயலாளர்தான் செய்து கொடுப்பார். சட்டசபையை திறம்பட நடத்துவதற்கு சபாநாயகருக்கு உதவியாக சட்டசபை செயலாளர்தான் அனைத்து பணிகளையும் செயல்படுத்துவார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளராக இருந்த பூபதி, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அப்போதைய சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபாலின் தனி செயலராக இருந்த கி.சீனிவாசன் பேரவைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
சட்டப்பேரவை செயலகத்தில் ஆசிரியர் பிரிவு மற்றும் நிர்வாகப் பணிப்பிரிவு என இரு பிரிவுகள் உள்ளன. இதில், நிர்வாகப் பிரிவில் இருந்தே முன்னதாக பேரவை செயலர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். சீனிவாசன் ஆசிரியர் பிரிவில் இருந்து, பேரவை செயலராக நியமிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
சட்டபேரவை செயலராக சீனிவாசன் நியமிக்கப்பட்டதில் பேரவையின் விதிகள் பின்பற்றப்படவில்லை. சட்டபேரவை செயலர் நியமனத்திற்கு முன் பணி மூப்பு பட்டியல் வெளியிடவில்லை. நிர்வாக பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரையே பேரவை செயலராக நியமிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சீனிவாசன் செயலர் பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் நேற்றுடன் (நவம்பர் 30) நிறைவடைந்தது.
இந்நிலையில், ஓய்வுபெறும் நாளில், சீனிவாசனுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியும், பேரவைச் செயலர் பதவிக்கு பதில் பேரவையின் முதன்மைச்செயலர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, பதவி உயர்வு வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார் சீனிவாசன்.
இதற்கு முன்பாக தமிழக அரசு பேரவைச் செயலர்கள் ஒருசிலருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பணிக்காலம் முடிந்தபிறகு யாருக்கும் பதவி உயர்வு வழங்கியதில்லை. முதன் முறையாக, சீனிவாசனுக்கு பணி நீட்டிப்போடு, பதவி அந்தஸ்து உயர்த்தியும் உத்தரவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. பேரவை நடவடிக்கைகளில் நல்ல அனுபவம் கொண்ட சீனிவாசன் பணிகள் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட நம்பிக்கையே இந்த வெகுமதிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட கே.சீனிவாசன், கடந்த 1991ஆம் ஆண்டு தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 1995-ல் சட்டப்பேரவை நிருபராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2010ல் தலைமை நிருபராகவும், 2013-ல் துணைச் செயலாளராகவும், 2016-ல் இணைச் செயலாளர், 2017 ஆகஸ்ட்டில் கூடுதல் செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
அதே ஆண்டு டிசம்பரில் சிறப்புச் செயலாளர் நிலைக்கு உயர்ந்தார் சீனிவாசன். அதைத் தொடர்ந்து சட்டசபை செயலாளர் பூபதியின் ஓய்வுக்குப் பிறகு சட்டப்பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 5 ஆண்டுகளாக இப்பணியில் தொடர்ந்து வந்த கே.சீனிவாசன், மேலும் 3 ஆண்டுகளுக்கு தற்போது பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications