டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!
சென்னை: தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட 'சிங்கப்பெண் அதிரடிப்படை' (Singappen Task Force) திட்டத்தின் தொடக்க விழா நாளை மாலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் விஜய் டெல்லியில் இருந்து வந்து செய்யும் மிக முக்கியமான பணியாக இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடக்கிறது. முன்பு மே 27-ம் தேதி நடைபெற இருந்த இந்த விழா, அவரது டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

முதல் முக்கிய திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, மே 10ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முதல் முக்கிய அரசாணையில் இந்த 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டமும் ஒன்று.
நாளை மாலை 5 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஒத்திகைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தார். அதன் ஒரு பகுதியாக இந்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் நோக்கம் என்ன?
பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக உணரும் சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
குற்ற சம்பவங்கள் நிகழும் சாத்தியம் உள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பார்கள். புகார்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு, அவர்களுக்கு உரிய ஆதரவு மற்றும் உதவிகளை உடனடியாக வழங்குவார்கள். சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ளும்.

புதிய சீருடை அறிமுகம்
இந்த சிறப்பு அதிரடிப்படைக்கு தனித்துவமான புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு காவல்துறையினரைப் போன்ற கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் வகையில் இந்த உடை தயாரிக்கப்பட்டுள்ளது.
நேவி ப்ளூ நிற சட்டை, காக்கி நிற பேண்ட், கருப்பு தொப்பி மற்றும் கருப்பு பெல்ட் ஆகியவை இந்த சீருடையின் முக்கிய அங்கங்கள். இந்த உடை அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் இவர்கள் தோன்றும் போது பெண்களுக்கு நம்பிக்கையையும், தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பான தமிழ்நாடு
முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் அரசு பெண்களின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த அதிரடிப்படை மூலம் பொதுப் பாதுகாப்பு சூழல் மேம்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரப் பயணங்கள், பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கும்.
நாளைய தொடக்க விழா தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும் என அரசியல் மற்றும் சமூக வட்டாரங்கள் பார்க்கின்றன. இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டால், பெண்கள் எந்த பயமும் இன்றி தங்கள் வாழ்க்கையை முன்னெடுக்கும் சூழல் உருவாகும்.












Click it and Unblock the Notifications