"All Finished" ஸ்டாலின் போல் சைகை காட்டிய முதல்வர் விஜய்! சிரிப்பலையால் அதிர்ந்த அவை
சென்னை: ஸ்டாலின் போல் Finished என முதல்வர் விஜய் ஆக்ஷனில் காட்டியதும் அவையே அதிர்ந்தது. எவில் எவில் என டெவில்ஸ் கூறக் கூடாது என்றும் விஜய், உதயநிதியை விமர்சித்தார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் முதல் நாள் ஆளுநர் உரையாற்றினார். அப்போது 3 ஆண்டுகள் கழித்து தமிழக சட்டசபையில் உரையை ஆளுநர் முழுமையாக படித்தார்.

அப்போது தவெக அரசு எழுதி கொடுத்த ஒரு வார்த்தையை கூட விடாமல் அவர் படித்தது, பலரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. இதையடுத்து 19, 22, 23 ஆகிய நாட்களுக்கு செயல்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது இனிய சொல்லால் பதிலளிக்கும் மன்னனை குறிக்கும் திருக்குறளை வாசித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். இதையடுத்து முன்னாள் உறுப்பினர்கள் சின்னசாமி, வி.எஸ்.காளிமுத்து ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் உரையில் எம்எல்ஏக்கள் கொடுத்த திருத்தங்கள் சட்டசபையில் ஏற்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு விஜய் பதிலளித்தார்.
விஜய் கூறுகையில், தவெகவை தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பிய மக்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்க வாய்ப்பளித்த சபாநாயகருக்கு நன்றி! எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சினு நினைத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு நன்றி!
நான் ஏதோ சூட்டிங்கில் இருந்து நேராக வந்து சிஎம் ஆனதாக பலர் கருதுகிறார்கள். ஈழத்தமிழர்கள் உரிமைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தேன். 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்தோம். சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். எல்லாரும் கட்சியை ஆரம்பித்த பிறகுதான் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்வார்கள். ஆனால் நாம் ஒவ்வொரு வீட்டிற்குள் சென்றுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளோம். நடிகர் கட்சி என நக்கல், நையாண்டினு கிண்டல் செய்கிறார்கள்.
சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 1.72 கோடி வாக்குகளை பெற்றோம். 35 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளோம். ஏதோ எளிதாக ஜெயித்து ஆட்சிக்கு வந்ததாக சிலர் கிண்டல் செய்கிறார்கள்.

ஒரு குடும்பம் மட்டும் முக்கியமல்ல, தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதை சொல்லும் ஆட்சிதான் தவெக. 100 சதவீதம் தூய்மையான ஆட்சிதான் என்பதையே இலக்காக கொண்டு ஆட்சி செய்கிறோம்.
காசு கொடுத்து ஓட்டு வாங்கும் ஒரு நச்சு கலாச்சாரத்தை சுக்குநூறாக உடைத்து எறிந்தோம். பெரியார் சொன்னதில் நமக்கு ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டோம்.
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் நம்பிக்கையில் என்பதை வெளிப்படையாக அறிவித்தோம். தவெகவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதையும் வெளிப்படையாக அறிவித்தோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கொள்கையாக அறிவித்துதான் அரசியலுக்கே வந்தோம். மின்வெட்டு பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும். நேற்று எதிர்க்கட்சித் தலைவர் பேசிய போது சோபா மாடல் என்றார், அப்படிஎன்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு நிறைய நாட்கள் எடுத்துக் கொண்டது.
Evil என்ற ஒரு வார்த்தையையும் எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தியிருந்தார். Evils Evils என Devils சொல்லக் கூடாது. அவங்க (திமுக எம்எல்ஏக்கள்) இருந்திருந்தால் எனக்கு ஒரு சைகை செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன் என்றார்.
அப்போது சபாநாயகர் , இப்போதும் செய்யலாம் தவறில்லை என்றார். உடனே விஜய், ஸ்டாலின் செய்தது போல் Finished என்ற செய்கையை செய்தார். இதனால் அவையே அதிர்ந்தது. ஸ்டாலின் முதல்வராக இருந்த போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்துவிட்டு வெளியே வந்தார், அப்போது செய்தியாளர்கள் அது குறித்து கேட்ட போது, finished என்ற சைகை செய்தார். அது வைரலானது.












Click it and Unblock the Notifications