கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கும் முன்பே ஷாக்.. மெட்ரோ ரயில் சேவைக்கு நோ.. எல்லாம் போச்சே!
சென்னை: கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இங்கே மெட்ரோ அமைக்க தேவை இல்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதே சமயம் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை மெட்ரோ அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் (கோயம்பேடு முதல் ஆவடி வரை) மற்றும் வழித்தடம் 3-ல் (சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை) மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . ரமேஷ் சந்த் மீனாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை மற்றும் வழித்தடம் 3-ல் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான .மு.அ.சித்திக், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (20.09.2023) சமர்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வழித்தடம் 5-ல் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான கட்டம் 2-இன் நீட்டிப்பு: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. நீளத்திற்கு தோராயமாக 15 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் ரூ.6376.18 கோடி மதிப்பீட்டில் (தோராயமாக) மெட்ரோ இரயிலை நீட்டிபதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்பிக்கப்பட்டு மெட்ரோ இரயிலை பரிந்துரைக்கிறது.
தகவல் தொழில்நுட்பப் பூங்கா, நில இருப்பு மற்றும் பட்டாபிராமத்தில் எதிர்கால வளர்ச்சி சாத்தியம் போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஆவடி முதல் பட்டாபிராம் வரையிலான விரிவாக்கத்தை விரிவான திட்ட அறிக்கை கட்டத்தில் ஆராயலாம் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை கட்டத்தில் விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த மெட்ரோ இரயில் நிலையங்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.
வழித்தடம் 3-ல் சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான கட்டம் 2-இன் நீட்டிப்பு:
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை 23.5 கி.மீ. நீளத்திற்கு தோராயமாக 12 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் ரூ. 5458.06 கோடி மதிப்பீட்டில் (தோராயமாக) சமர்பிக்கப்பட்டுள்ளது.
நீட்டிபதற்கான சாத்தியக்கூறு அறிக்கை மேற்குறிப்பிடப்பட்டுள்ளபடி முன்மொழியப்பட்ட இடத்தில் மெட்ரோ அமைப்பிற்கான பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், தற்போதைக்கு மேம்படுத்தப்பட்ட மாநகர பேருந்து சேவைகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. 2-ம் கட்டத் திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர், கணிசமான தொழில்துறை மற்றும் குடியிருப்பு மேம்பாடுகளைக் கொண்ட திருப்போரூர், மகாபலிபுரம் வழியாக கேளம்பாக்கத்தின் தெற்கு விரிவாக்கத்தில் மேலும் ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications