லேட் நைட்டில் பஸ் புக் பண்ணி இருக்கீங்களா! கவலை வேண்டாம்.. சென்னை மெட்ரோ எடுத்த வேற லெவல் முடிவு
சென்னை: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சென்னைவாசிகள் ஊருக்கு கிளம்ப ரெடியாகிவிட்டனர். இதற்கிடையே தீபாவளிக்கு ஊருக்குச் செல்வோரைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்குச் சென்னையில் வாழும் பிற மாநில மக்கள் எளிதாகச் சொந்த ஊர் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், சிறப்பு ரயில்கள், சிறப்புப் பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ: இதுபோன்ற நாட்களில் சாலைகளில் டிராபிக் உச்சத்தில் இருக்கும் இதனால் நகரில் தேவையான இடங்களுக்குச் செல்ல மெட்ரோ சிறந்த ஆப்ஷனாக இருக்கும். அதேநேரம் இரவு 11 மணி வரை மட்டுமே மெட்ரோ இருக்கும் என்பதால் லேட் நைட்டில் ஊருக்கு செல்வோருக்கு இது சிரமத்தைத் தருவதாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிக்காக நாளை 30.10.2024 (புதன்கிழமை) மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் அட்டவணையின் படி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில் சேவை: காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்குப் புறப்படும்).
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை: பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்
தீபாவளி அட்டவணை: 31.10.2024 (வியாழக்கிழமை) மற்றும் 01.11.2024 (வெள்ளிக்கிழமை) மெட்ரோ இரயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும்.. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications