"விவசாய லோன்".. கடைசியில் ஸ்டாலினுக்கு வந்து சேர்ந்த "நன்றி"..!
விவசாயிகள் சங்கம் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளது
சென்னை: விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்..!
இந்த முறை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வீரியத்துடன் திமுக களம் இறங்கி உள்ளது.. அதனால் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் கடனை ரத்து செய்யும்படி விவசாயிகள் சொல்லி கொண்டே இருந்தனர்..
இந்த கடன் மட்டும் கோடிக்கணக்கான ரூபாயில் இருப்பதால் விழி பிதுங்கி இருக்கும் மக்களுக்கு, நம்பிக்கை வார்த்தைகளை ஸ்டாலினும் தந்திருந்தார்..
இந்நிலையில், கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் ரூ 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக பேரவையில் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் வரவேற்புகள், பாராட்டுக்கள் வந்தாலும், திமுகவின் அறிவிப்பு மற்றும் தேர்தலை மனசில் வைத்து கொண்டுதான் தமிழக அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நேரத்தில்தான், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவானது, திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளது..
இதை பற்றி அவர்கள் சொல்லும்போது, "இன்னும் சில மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய கடன் தள்ளுபடி பலன், ஸ்டாலினின் அறிவிப்பால்தான் உடனடியாக கிடைத்திருக்கிறது... அதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களால் பலன் அடைந்திருக்கிறார்கள். அதற்காக தமிழக விவசாயிகளின் சார்பில் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளது.