சிக்கன் ரைஸால் வந்த சிக்கல்.. துடித்து மடிந்த மாணவி! ஐஆர்சிடிசி மீது விழுந்த புகார்.. பறந்த விளக்கம்
சென்னை: ரயிலில் பயணம் செய்த போது சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் மாணவி குறித்த குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நகரங்களுக்கும் சிறு சிறு ஊர்களுக்கும் கூட இந்திய ரயில்வே தனது சேவையை வழங்கி வருகிறது. ரயில் பயணத்தோடு ஹோட்டல் புக்கிங் உணவு உள்ளிட்ட சேவைகளையும் ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது.

அதே நேரத்தில் ரயில் பயணத்தின் போது கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ரயில்வே பயணிகள் எதிர்கொண்டு வருகின்றனர். உணவு தரம் இன்மை புகார் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை ரயில் பயணிகள் எழுப்புகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள் இருந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் தற்போது உயிர் பறிக்கும் ஒரு புகாரில் ரயில்வே நிர்வாகம் சிக்கி இருக்கும் நிலையில் அது தொடர்பாக விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. கோவை சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் டென்னிஸ். இவருடைய 15 வயது மகளான எலினா லாரெட் கூடைப்பந்து வீராங்கனை ஆவார். அதே பகுதியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் அவர், பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக எலினா சக வீராங்கனைகளுடன் ரயிலில் மத்திய பிரதேசம் சென்றார். போட்டி முடிந்து நிலையில் நேற்று முன்தினம் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை வந்திருக்கிறார். ரயில் பயணத்தின் போது சாப்பிடுவதற்காக சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரயில் பயணத்தின் போது எலினா சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ் மற்றும் பர்கர் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு கடும் வயிற்று வலியோடு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து எலினா சென்னையில் உள்ள தனது உறவினரிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து ரயில் சென்னை வந்ததும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.. தொடர்ந்து எலினா தனது உறவினர் வீட்டுக்கு சென்று நிலையில் சிறிது நேரத்திலேயே மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதை அடுத்து உறவினர்கள் அவரை மீட்டு பெரவல்லூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மருத்துவமனையில் அவரை சோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் தான் எலினா உயிரிழந்ததாக ஐஆர்சிடிசி மீது புகார் வைக்கப்பட்டதோடு இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் இருந்தது. இந்த நிலையில் இந்த புகாருக்கு ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. அதில்." கடந்த 15ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து கிளம்பிய கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாணவி சாப்பிட்ட சிக்கன் ரைஸ் ஐஆர்சிடிசி உணவு பட்டியலில் இல்லை.
மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக 139 என்ற மருத்துவ உதவி எண்ணை தொடர்பு கொண்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென பால்ஹர்ஷா ரயில் நிலைய மருத்துவர்கள் கூறினர். ஆனால் அவர் தொடர்ந்து பயணம் செய்ய முடிவு செய்திருக்கிறார். மாணவி மரணத்திற்கும் ரயில்வேக்கும் எந்த தொடர்பும் கிடையாது" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications