கோவை கார் வெடி விபத்து சந்தேகத்தை எழுப்புகிறது.. மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.. அண்ணாமலை ட்வீட்!
சென்னை: கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலிண்டர் வெடிப்பு
இதன்பின் விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ள போலீசார் விபத்து குறித்த விசாரணை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கார், ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.

டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு
இதன் பின்னர் சம்பவ இடத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கார் வெடித்தது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். காரில் இருந்த இரண்டு சிலிண்டர்களில், ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

6 குழுக்கள் அமைப்பு
சிலிண்டர் எங்கிருந்து வாங்கப்பட்டது, இறந்த நபர் யார், என விசாரித்து வருகிறோம். மொத்தம் 6 குழுக்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. என்ஐஏ-க்கு தகவல் தெரிவிப்பது குறித்து புலன் விசாரணைக்குப் பின் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் விசாரித்து வருகின்றனர்.

அண்ணாமலை ட்வீட்
இந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மக்களை காக்க வேண்டும்
தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை பாஜக வரவேற்கிறது. தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications