கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை.. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல்.. விமர்சிக்கும் அண்ணாமலை!
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: கோவையில் மக்கள் முன்னிலையிலும், நீதிமன்றம் அருகிலும் நடந்த கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோவை நகரம் கொலை நகரமாக மாறி வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ள அண்ணாமலை, துப்பாக்கி கலாச்சாரமும் தலையெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புற நுழைவு வாயிலில் கோபாலபுரம் பகுதி இருக்கிறது. அங்கு வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், தனியார் விடுதிகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு இரண்டு இளைஞர்களை, 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டியது.
அரிவாள், கத்தியால் இருவரையும் சரமாரியாக தாக்கியதில், ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபரை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தப்பித்துச் சென்றது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்றம் அருகே கொலை
இதன் முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பதும், காயமடைந்தவர் சிவானந்தாகாலணியைச் சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது. மாவட்ட நீதிமன்றம் அருகில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் முன்னிலையில் கொலை
இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஆவாரம் பாளையம் அருகே இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த சத்திய பாண்டி என்பவரும் ஓட ஓட விரட்டி அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். கோவையின் ஒருவேறு பகுதிகளில் பயங்கர சம்பவங்கள் அரங்கேறியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அண்ணாமலை கூறுகையில், கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை. கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது.

சட்டம் ஒழுங்கு
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற சூழல்
பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications