கோவை மதுரை மெட்ரோ திட்டத்திற்கு அதிக செலவாம்.. உபி குஜராத்திற்கு சீக்கிரம் ஒப்புதல்.. ஆர்டிஐ ஷாக்
சென்னை: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்புகள் அறிவிப்பு நிலையிலேயே உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. கோவை, மதுரை ரயில் மெட்ரோ ரயில் திட்டங்கள் சுமார் 19 மாதங்களாக ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இந்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அதிர்ச்சி பதில் கொடுத்துள்ள மத்திய அரசு, உத்தரப்பிரேச மாநிலத்தில் 5 மாதங்களிலும், குஜராத்தில் 8 மாதங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய தகவல் ஆர்டிஐ மூலம் அம்பலமாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்டும் மத்திய அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் 14 வருடங்களாகியும் அந்தத் திட்டம் காகித அளவிலேயே உள்ளது. தற்போதுவரை ஆரம்ப கட்ட பணிகள் கூட தொடங்கவில்லை. அதேநேரத்தில் கோவையுடன் அறிவிக்கப்பட்ட கொச்சி, புனே உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டுக்கே வந்துவிட்டன.

கோவை மதுரை மெட்ரோ ரயில்
கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் ரூ.6,683 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார். ஆனால் அறிவித்தபடி நிதி ஒதுக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மற்றும் மதுரையில் மத்திய அரசின் உதவியுடன் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் ரூ.10,740 கோடி மதிப்பிலும், மதுரை மாவட்டத்தில் ரூ.11,360 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
கால தாமதம்
கிட்டத்தட்ட 19 மாதங்களாகியும் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை. அதனால் அவை முதல்கட்ட பரிசோதனையின் கீழ் உள்ளன என்று கூறியுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மத்திய அரசிடம் திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக அனுப்பி சுமார் 19 மாதங்கள் கடந்துவிட்டன. அதன் பிறகு கூடுதல் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர், ஆக்ரா மெட்ரோ திட்டத்தை, 5 மாதங்களிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 8 மாதங்களிலும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அங்கீகாரம் அளித்துள்ளது.
உபி, குஜராத் சலுகை
இது கோவை, மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னைக்கு அடுத்த கோவை, மதுரை வேகமாக வளர்ந்து வருகிறது. கோவை ஐடி மற்றும் தொழில்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் கோவையின் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் மிகவும் அவசியம். தற்போதுவரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பது கோவை மக்களிடம் அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து கால தாமதம் செய்யப்படுகிறது. மாநிலத்தின் இரண்டாம் கட்ட நகரங்களின் போக்குவரத்தை மேம்படுத்த மெட்ரோ ரயில் திட்டம் அவசியம். அதைக் கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களை போல தமிழகத்திற்கும் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications